தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்
திருக்கும் படம் 'ஜகமே தந்திரம்'. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிடாமல் இணையத்
தளத்தில் வெளியாகப்போகிறது. அதனால் தயாரிப்பாளர் மீது நடிகர் தனுஷ் கோபத்தில் இருக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அதுபற்றி முதன்முதலாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் விளக்கம் அளித்திருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்
பதிவு செய்துள்ளார். 'ஒய் நாட் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக 'நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி' தளத்தில் ஜூன் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் 'ஓடிடி'யில் வெளியாகப் போகிறது என்று முடிவானதிலிருந்தே படம் தொடர்பாக எந்தவொரு டுவிட்டையும் தனுஷ் பதியாமல் இருந்தார். படம் பற்றி எந்த ஒரு விளம்பரமும் அவர் செய்யவில்லை. இதன் மூலம் படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் - தனுஷ் மோதல் வெளியே தெரியவந்தது.
தற்பொழுது 'ஜகமே தந்திரம்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தயாரிப்பாளர் சசிகாந்திடம் தனுஷ் உடனான மோதல் குறித்துக் கேட்டபோது, "கடந்த 4 மாதமாக இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், இது தொடர்பாக நான் எந்தவொரு கருத்தும் சொன்னதில்லை.
"எதிர்மறை பேச்சுகள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் நான் தயாரித்திருக்கும் இந்தப் படம் உலக அளவில் போகப் போகிறது என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறேன்.
"நானும் தனுஷும் பத்து ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். இந்தப் பட விவகாரத்தில் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
"ஜகமே தந்திரம்' திரையரங்குகளில் வந்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தை எடுத்து வைத்தார் தனுஷ். அது ஒன்றும் தவறான கருத்தில்லை. அவருடைய ரசிகர்கள் இந்தப் படத்தைத் திரையரங்கில் கொண்டாடுவார்கள். அது உண்மைதான்.
"ஆனால் ஓர் ஆண்டாக பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படத்தை வெளி
யிடாமல் எத்தனை நாட்களாக காத்திருப்பது? வாங்கிய கடனுக்கு எவ்வளவு வட்டி கட்டுகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். இது தொடர்பாக நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன.
"கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. எப்போது இந்தப் படம் வெளியாகும் என்றும் தெரியாத நிலையில்தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்.
"ஜகமே தந்திரம்' படத்தின் மறுபக்கத்தைப் பாருங்கள். இந்தப் படம் சுமார் 200 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட 'நெட்ஃப்ளிக்ஸ்' இணையத்தளத்தின் மூலம் உலக அளவில் வெளியாகவுள்ளது.
"இந்தப் படம் குறித்து உலகளவில் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
"யாரும் எதிர்பாராமல் இந்த கொரோனா நோய்த்தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்பொழுதுதான் மக்கள் இந்த நோயின் தாக்கத்தை உணரத் தொடங்கி இருக்கிறார்கள். பலரும் வீட்டிற்குள்ளேயே இருக்க விரும்புகிறார்கள்.
"இந்நிலையில் இந்தப் படம் 'ஓடிடி'யில் வெளியாகும்போது உலகெங்கும் இருக்கும் தனுஷின் ரசிகர்கள்
குடும்பத்துடன் வீட்டில் இருந்து இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. விரைவில் இந்தப் படத்திற்கான வரவேற்பை தனுஷும் அவரது ரசிகர்களும் உணர்வார்கள்," என்று கூறினார்.
இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி,
"ஆக்ஷன்' படத்தில் நடித்தபோது நான் சொந்தக் குரலில் பேசியிருந்தேன். ஆனால் அது எனக்கு அவ்வளவாக திருப்தி ஏற்படவில்லை. அதன்பிறகு நன்றாகப் பயிற்சி எடுத்து 'ஜகமே தந்திரம்' படத்தில் என்னுடைய வசனங்களை நானே பேசி இருக்கிறேன். அது எனக்கு முழு திருப்தியை அளித்திருக்கிறது. 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நான் சொந்தக் குரலில்தான் பேசப் போகிறேன்," என்று கூறியிருக்கிறார்.

