மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'பிசாசு-2' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.
இந்தப் படத்துக்காக அவரைப் படாதபாடு படுத்திவிட்டதாக கூறுகிறார் மிஷ்கின்.
அதன் பலனாக ஆண்ட்ரியாவின் நடிப்பு அருமையாக இருந்தது என்று பாராட்டவும் செய்கிறார்.
'பிசாசு' படத்தின் முதல் பாகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து உருவாகும் இரண்டாம் பாகத்திலும் பிசாசுதான் முக்கிய கதாபாத்திரமாம். இந்தப் பாகத்திலும் அன்பு, பாசம் கருணை ஆகியவற்றுடன் சிறிதாக ஒரு நல்ல செய்தியும் இடம்பெற்றிருக்கும் என்கிறார் மிஷ்கின்.
"அதேசமயம் இரு பாகங்களிலுமே வெவ்வேறு கதைகளைத்தான் சொல்லி இருக்கிறேன். இரண்டுக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை. ஆண்ட்ரியாவின் திரைவாழ்க்கையில் இது முக்கியமான படமாக அமையும். அந்தளவுக்கு தன்னை வருத்திக்கொண்டு நடித்துள்ளார். என் பங்குக்கு நானும் அவரை மிகவும் சிரமப்படுத்தினேன்.
"இது பெரியவர்களுக்கான திகில் படம்தான். எனவே படம் பார்ப்பவர்களை நிச்சயம் மிரள வைக்கும். இதுபோன்ற கதைகளில் நடிக்க நல்ல அனுபவமும் திறமையும் மட்டும் போதாது. கடுமையாக உழைக்கவும் வேண்டும். ஆண்ட் ரியா அவ்வாறு உழைப்பைக் கொட்டி இருக்கிறார்," என்கிறார் மிஷ்கின்.

