சங்கர் படத்தில் மாளவிகா
'மாஸ்டர்' படத்தில் நடித்த பின்னர் அதன் நாயகி மாளவிகா மோகனனுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
தற்போது இயக்குநர் சங்கர், தெலுங்கு நாயகன் ராம்சரணை வைத்து பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கும் தெலுங்குப் படத்தில் மாளவிகாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனராம்.
இந்த வாய்ப்பு கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம் என்று அவர் கருதிய நிலையில், கூடுதல் நாள்கள் நடிக்கக் கேட்டு, பெருந்தொகையை சம்பளமாகவும் தர முன்வந்துள்ளது மாளவிகாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சங்கர் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக வெளியான தகவலை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்திருக்குமாறு சொல்கிறார் மாளவிகா.
ரசிகர்களாக மாறிய ரகுல் குடும்பம்
'தி ஃபேமிலி மேன்-2' இணையத் தொடர் சில சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ள போதிலும் அதன் நாயகி சமந்தாவுக்கு சில விஷயங்கள் சாதகமாகவே நடந்துள்ளன.
இந்த தொடருக்காக அதிக சம்பளம் வாங்கிய நிலையில், சமந்தாவின் நடிப்புக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, சக நடிகைகளின் பாராட்டு சமந்தாவை ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. நடிகை ரகுல் பிரீத் சிங் தாம் சமந்தாவின் தீவிர ரசிகையாகிவிட்டதாக கூறியுள்ளார்.
"இரு தினங்களுக்கு முன்புதான் அந்த இணையத் தொடரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனோஜ்பாஜ்பாயின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதேபோல் ராஜி கதாபாத்திரத்தில் சமந்தா மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
"இது சாதாரணமான கதாபாத்திரம் அல்ல. மிகவும் சவாலானது. இந்த தொடரைப் பார்த்த பிறகு எங்கள் குடும்பமே சமந்தாவின் ரசிகைகளாக மாறிவிட்டது," என்று ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.
மீண்டும் இணைந்த பாபி, கார்த்திக்
'ஜிகிர்தண்டா', 'பேட்ட' ஆகிய படங்களை அடுத்து மீண்டும் பாபி சிம்ஹாவை தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
பாபி கன்னடத்தில் நடித்த முதல் படம் '777 சார்லி'. இதை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட உள்ளனர். இதையடுத்து தமிழ்ப் பதிப்பின் உரிமையை வாங்கி உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். மலையாள வெளியீட்டு உரிமையை நடிகர் பிருத்விராஜ் வாங்கி உள்ளாராம். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'சியான் 60' படத்தில் பாபி ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அவருக்கேற்ற கனமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாம்.
"கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ஜிகிர்தண்டா'வில் நடித்த போது தேசிய விருது கிடைத்தது. அவர் நல்ல படைப்பாளி மட்டுமல்ல, சிறந்த நண்பரும்கூட. அவர் எந்த வேடத்தில் நடிக்கச் சொன்னாலும் தயங்கமாட்டேன். காரணம் எத்தனை திறமையானவர் என்பது எனக்குத் தெரியும்," என்கிறார் பாபி.