கவர்ச்சி உடை, ஆரவார நடனம் என்றெல்லாம் செய்து ரசிகர்களைக் கவர்வதில் வாணி போஜனுக்குப் பெரிதாக ஆர்வமில்லை.
தனக்கேற்ற குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களையும் சுவாரசியமான கதைகளையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் ராதாமோகன் இயக்கத்தில் இவரும் வைபவ்வும் இணைந்து நடித்த 'மலேசியா டு அம்னீசியா' திரைப்படம் வெளியாகி உள்ளது. படத்துக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் உற்சாகத்தில் உள்ளார் வாணி.
"இந்த அளவுக்குப் பாராட்டு கிடைக்கும் என உண்மையாகவே நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் எனது மகிழ்ச்சிக்கும் அளவில்லை. கூடுமானவரை நான் ஒப்பனையை நம்பமாட்டேன். அதேசமயம் குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்துக்கு அதிக ஒப்பனை தேவை என்று சொன்னால் அது கூடாது என அடம்பிடிப்பதும் எனது வழக்கமல்ல.
"ஆனால் இந்தப் புதிய படத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் நாயகி வீட்டில்தான் இருப்பாள். அதிலும் சமையலறையில் அதிக நேரம் செலவிடும் ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். எனவே, அதிக ஒப்பனை, சிகையலங்காரம் என்று செய்துகொண்டிருந்தால் ஒருவித செயற்கைத்தன்மை வந்துவிடும். அதனால் இயக்குநரின் அனுமதியோடு இரண்டையுமே தவிர்த்தேன்.
"அதனால்தான் என் நடிப்பு எடுபட்டதாக தோன்றுகிறது. உண்மையில் அந்த இயல்பான தோற்றத்துக்கும் நடிப்புக்கும்தான் இவ்வளவு பாராட்டு," என்கிறார் வாணி.
கதைப்படி இப்படத்தின் நாயகன் வைபவ் திருமணத்துக்குப் பிறகும் வேறொரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பு வைத்திருப்பார். இந்த உண்மை தெரிந்தபிறகும் அவரை மன்னித்து ஏற்றுக்கொள்வார் வாணி. இவ்வளவு பெருந்தன்மையுடன் இருப்பது சரிதானா, சாத்தியம்தானா என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு வாணி பாந்தமாகப் பதிலளித்துள்ளார்.
"குடும்பத்தின் நலன் கருதி கணவனைத் தண்டிக்க முடியாமல் சகித்துக்கொள்ளும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அதேசமயம் துரோகத்தைத் தாங்கமுடியாமல் கணவனைத் தூக்கி எறிபவர்களும் இருக்கிறார்கள். உண்மையில் இந்தக் காலத்தில் பெரும்பாலான பெண்கள் தற்சார்பு கொண்டவர்கள்.
"கணவனை மன்னிக்கும் பெண்கள் அன்புக்கும் காதலுக்கும் உள்ள முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள். ஆனால் அதையே சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கணவன்மார்கள் செயல்படக்கூடாது என்பதுதான் என் கருத்து," என்று சொல்லும் வாணி போஜன், சமூக வலைத்தளங்களில் வெளியிடும் அவரது புகைப்படங்களுக்குப் பலத்த வரவேற்பு உள்ளது.
ஒவ்வொரு படத்துக்கும் லட்சக்கணக்கில் 'லைக்ஸ்'கள் கிடைக்கிறதாம். அதேசமயம் சமூக அக்கறையுடன் சில விஷயங்கள் குறித்துக் கருத்து தெரிவிக்கும்போது அதற்கான பின்னூட்டங்கள் குறைவாகவே உள்ளனவாம். இது தமக்கு வருத்தமளிப்பதாகச் சொல்கிறார்.
"அனைவருக்குமே சமூக அக்கறை என்பது வேண்டும். பொழுதுபோக்கிற்காக மட்டுமே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக்கடாது. அத்தகைய போக்கும் மனநிலையும் மாறவேண்டும்," என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
சினிமா மட்டுமே உலகம் அல்ல என்றும் ரசிகர்கள் அவ்வாறு நினைப்பதில்லை என்றும் கூறுகிறார். தொலைக்காட்சி, சினிமா ஆகியவற்றைக் கடந்து இன்று பல்வேறு துறைகளில் ஏராளமான நட்சத்திரங்கள் உருவாகி உள்ளதாகக் குறிப்பிடுபவர், சினிமா நட்சத்திரங்களுக்கு இணையான புகழுடன் அல்லது அவர்களை விட அதிகம் கொண்டாடப்படும் பலர் உருவாகி இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
"எனவே சினிமா நட்சத்திரங்களை மட்டுமே ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நான் நம்பவில்லை. இனிமேல் திறமைக்கும் உழைப்புக்கும்தான் மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன்," என்று சொல்லும் வாணிக்கு கைக்கடிகாரங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அதேபோல் பலவிதமான நவீன ஆடைகளை அணியவும் விரும்புகிறார்.
"இந்த அளவுக்கு நான் வளர்ந்திருப்பதற்கு எனது அழகு காரணமல்ல. திறமைதான் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. தவிர, திறமையைக் கடந்த தன்னம்பிக்கையும் எனது வெற்றிக்குக் காரணம் என நினைக்கிறேன். எனது பெயரைக் கேட்டு நான் வட இந்தியப்பெண் என்று சிலர் கருதுகிறார்கள். உண்மையில் நான் தமிழ்ப் பெண்தான். ஊட்டியில் உள்ள படுகாஸ் இனத்தைச் சேர்ந்தவள். கொஞ்சம் கன்னடம் கலந்த தமிழில் பேசுவேன். நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு நானே பின்னணிக் குரல் கொடுக்கிறேன்," என்கிறார் வாணி போஜன்.
, :
வாணி போஜன்