'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பெற்ற வெற்றியின் மூலம் பிரபலமான முகென்ராவ் தமிழில் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். அவற்றுள் முதலில் திரைக்கு வருகிறது 'வேலன்'.
அறிமுக இயக்குநர் கவின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முகென் ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே 'கென்னடி கிளப்' படத்தில் நடித்தவர்.
தந்தை தமது பகையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தனது காதலியையே இழக்கத் துணிகிறான் கதாநாயகன். மகனுடைய காதல் கைகூட பகையாளியிடம் தோற்றுப் போக தயாராகிறார் தந்தை.
இறுதியில் யாருடைய நோக்கம் வெற்றி பெறுகிறது என்பதுதான் இப்படத்தின் கதையாம். தந்தை வேடத்தில் பிரபுவும் மகனாக முகெனும் நடித்துள்ளனர்.
"கதைப்படி முகென் கல்லூரி மாணவராக வருகிறார். பொள்ளாச்சி, பாலக்காடுதான் கதைக்களம். 50 ஆண்டுகளாக நீடிக்கும் பகை, தந்தை மகன் உறவு, காதல், நட்பு என அனைத்து அம்சங்களையும் கொண்ட கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது," என்கிறார் இயக்குநர் கவின்.
தயாரிப்பாளரிடம் இவர் தெரிவித்த தொகையைவிட தயாரிப்பு அதிகம் செலவாகிவிட்டதாம். இருப்பினும் கவின் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக கணக்குப் பார்க்காமல் செலவிட்டுள்ளார் தயாரிப்பாளர்.
'சிறுத்தை' சிவாவிடம் உதவி இயக்குநராக 'வீரம்' முதல் 'அண்ணாத்த' படம் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவர் கவின்.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேரும் ஓர் இளைஞன்தான் இவரது கதையின் நாயகன். கதையை உருவாக்கிய சமயத்தில்தான் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் முகெனைப் பார்த்தாராம்.
தன் கதைக்குப் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி முடிந்த கையோடு முகெனை சந்தித்து கதை சொல்லி உள்ளார். கதை பிடித்திருந்ததால் அவர் நடிக்க சம்மதித்தாராம்.
"அவருக்கும் நாயகி மீனாட்சிக்கும் கூத்துப்பட்டறையில் சிறிய பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம். முழுக்கதையையும் பலமுறை படித்து தனது கதாபாத்திரத்துடன் நன்கு பொருந்திவிட்டார் முகென்.
"மேலும் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு பத்து நாள்களுக்கு முன்பே சென்று அங்கிருக்கும் மக்களுடன் பேசிப் பழகினார்," என்கிறார் கவின்.
மலேசியாவில் பிறந்து வளர்ந்ததால் கோவை வட்டார மொழியில் அவரால் பேச முடியவில்லை. அதனால் தனது இயல்புக்கேற்ப பேசி நடித்துள்ளார். சூரியுடன் முதல் நாள் நடித்தபோது முகென் முகத்தில் கொஞ்சம் தயக்கம் தென்பட்டதாம். ஆனால். சூரி அதைப் புரிந்துகொண்டு அவருக்கு என சில குறிப்புகளைக் கூறி, வசனம் பேசுவதிலும் உதவி செய்தாராம்.
அதேபோல் உணர்வுபூர்வமான காட்சிகளில் எப்படி நடிக்கவேண்டும் என்று பிரபுவும் தன் பங்குக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார்.
"கடந்த ஆண்டு ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் நான் உருவாக்கி உள்ள கதை குறித்தும் 'வேலன்' பட வாய்ப்பு குறித்தும் இயக்குநர் சிவா சாரிடம் விபரம் தெரிவித்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
"உண்மையாக உழைக்க வேண்டும், ஒழுக்கம் முக்கியம் என்றும் அறிவுரை கூறினார். என் தம்பி நிச்சயம் வெற்றி பெறுவான் என்று அவர் சொன்னது இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரது பெயரைக் காப்பாற்றுவேன்," என்கிறார் இயக்குநர் கவின்.
இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இவர் 'தோழா' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர். அண்மையில் தெலுங்கில் இவர் இசையமைத்த 'இன்கேம் இன்கேம்' பாடல் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
மொத்தத்தில் நல்ல குழுவுடன் களமிறங்கி இருப்பதாகச் சொல்கிறார் கவின்.