'வடசென்னை' படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க விரும்புவதாக சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதில் ஏற்று நடித்துள்ள பத்மா கதாபாத்திரத்தை தாம் மிகவும் நேசிப்பதாகவும் நல்ல கதைகள் தமிழக கிராமங்களையும் சென்றடைய வேண்டும் என விரும்புவதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"வடசென்னை' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் எனத் தெரியவில்லை. இயக்குநர் வெற்றிமாறனிடம்தான் இதுகுறித்துக் கேட்க வேண்டும். எனினும் எப்போது அதற்கான வேலையைத் தொடங்கினாலும் கண்டிப்பாக என்னை அழைப்பதாக அவர் கூறி இருக்கிறார்.
"அசுரன்' படத்தில் ஏன் எனக்கு வாய்ப்புத் தரவில்லை என்று கேட்டேன். என் வயதுக்கான கதாபாத்திரம் அமையாததால் அழைக்கவில்லை என்றார். என்னை மதித்து அவர் விளக்கமளித்தது பெரிய விஷயம்.
"தனுஷ் சார் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருப்பார். 'வடசென்னை' படத்தில் எனக்கான முதல் காட்சியிலேயே அவரை ஏசுவது போல் வசனம் கொடுத்தனர். மிகவும் தயக்கத்துடன்தான் நடித்தேன். திரையரங்குக்கு சென்று படம் பார்க்கும்போது ரசிகர்கள் என்னை அடிக்கவந்துவிடக்கூடாது என்றுகூட பயந்தேன்.
"சொன்னால் நம்பமாட்டீர்கள்... படம் வெளியான முதல் நாள் அன்று சென்னையில் உள்ள திரையரங்குக்குச் சென்றிருந்தேன். நான் தகாத வார்த்தைகளைப் பேசி நடித்த காட்சியைத் திரையில் கண்டதும் ரசிகர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டி ரசித்தனர். எனக்குப் பெரும் அதிர்ச்சி.
"அதேசமயம் ரசிகர்களின் வரவேற்பைக் கண்டதும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பத்மா கதாபாத்திரத்தை பலரும் ரசித்தனர்.
"இனி உங்களுடைய அனைத்துப் படங்களிலும் நான் இருக்க வேண்டும் என்று வெற்றிமாறன் சாரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்," என்று சொல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ், சில கதைகள் தமக்குப் பொருத்தமாக இல்லை என்று கருதினால் வேறு நடிகைகளைச் சிபாரிசு செய்கிறார். பெரிய இயக்குநர்களின் படங்களில்கூட தமக்குப் பதில் பிறரை நடிக்க வைத்துள்ளார். இதில் எந்தவித தயக்கமும் இல்லை என்கிறார்.
"ஒரு கதையைக் கேட்கும்போதே அதில் உள்ள கதாபாத்திரத்துடன் என்னைப் பொருத்திப் பார்ப்பேன். இப்படித்தான் ஒரு பெரிய இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோது வேறு ஒரு நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு அவரைப் பரிசீலிக்கலாமே என்று கேட்டேன்.
"இயக்குநரும் நான் சொன்னதை ஏற்றுக்கொண்டு அந்த நடிகையை நடிக்க வைத்தார். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சில படங்களில் நடிக்க விரும்பியபோதும் கால்ஷீட் பிரச்சினையால் முடியாமல் போனது.
"தமிழ் சினிமாவில் இப்போது ஆண்ட்ரியா, வரலட்சுமி, மஞ்சிமா மோகன் என்று பலர் நன்றாகத் தமிழில் பேசி நடிக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களுக்கான அங்கீகாரம் சரியாக அமையவில்லை என்று தோன்றும். இப்படிப்பட்டவர்களுக்கு நானும் எனக்கு அவர்களும் சிபாரிசு செய்வது நல்ல விஷயம்தானே. இந்தியிலும் நடிக்க விரும்புகிறேன்," என்கிறார் ஐஸ்வர்யா.
இவர் நடித்த முதல் இந்திப் படம் 'டாடி'. இந்தியில் சரளமாகப் பேச முடியவில்லை என்று வருத்தப்படுபவர் விரைவில் மொழியை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறாராம்.
"அண்மையில்கூட இணைய நிறுவனம் ஒன்றின் புதுப்படத்தில் நடிக்கக் கேட்டு அணுகினர். சில வசனங்களைப் பேசி, நடித்து காணொளிப் பதிவாக அனுப்புமாறு கூறியிருந்தனர். ஆனால் என்னால் இந்தியில் சரளமாகப் பேசமுடியவில்லை. பிறகு மும்பைக்கே நேரில் சென்று நடிப்புத் தேர்வில் பங்கேற்றேன். 'நீங்கள் அருமையாக நடித்தாலும் இந்தியில் சரளமாகப் பேச முடியாததால் வாய்ப்பு அளிக்க முடியவில்லை' என்றனர். இப்போதைக்கு தென் இந்திய மொழிகளில் மட்டுமே கவனம் உள்ளது," என்கிறார் ஐஸ்வர்யா.
, :
ஐஸ்வர்யா ராஜேஷ்

