ரசிகர்களுக்கு உதவிய சகோதரர்கள்
கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் ரசிகர்களுக்கு சூர்யாவும் கார்த்தியும் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். சிரமத்தில் உள்ள ரசிகர்கள் 250 பேருக்கு ஆளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் சூர்யா. இத்தொகை ரசிகர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அவரது சகோதரர் கார்த்தியும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 200 ரசிகர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கி உள்ளார். இச்சகோதரர்களின் இந்த நற்செயலை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
பிரபாஸ் படத்தில் ராஷி கண்ணா
நடிகை ராஷி கண்ணா தமிழில் 'அரண்மனை-3', விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்', ஜீவாவுடன் 'மேதாவி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்துகிறார்.
இந்நிலையில் நாக் அஷ்வின் இயக்கத்தில் 'பாகுபலி' பிரபாஸ் நடிக்க உள்ள புதுப் படத்திலும் ராஷியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்படத்தில் ஏற்கெனவே தீபிகா படுகோன் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் ராஷி. நாயகியாக இல்லாவிட்டாலும் தமக்கான கதாபாத்திரம் பிடித்துப் போனதால் அவர் கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாகத் தகவல்.

