கல்விக்கு மட்டுமே வாழ்க்கையில் முதன்மையான இடத்தைக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வந்த தமக்கு திடீரென திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதாக சொல்கிறார் வித்யா பிரதீப்.
படிப்பில் கெட்டிக்காரரான இவர், முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 'ஸ்டெம் செல்' தொடர்பான ஆய்வை மேற்கொண்ட பிறகு மருத்துவத் துறை ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
முதல் படத்திலேயே கதாநாயகியாக நடித்தால்தான் திரையுலகில் நிலைத்திருக்க முடியும் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று குறிப்பிடுபவர், பொருத்தமான கதாபாத்திரங்களில் நடித்தாலே போதும், ரசிகர்களிடம் பெயர் வாங்க முடியும் என்கிறார்.
"நன்றாகப் படிக்கவேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் வாழ்க்கையில் எனது இலக்காக இருந்தது. என் பெற்றோரும் இதைத்தான் விரும்பினர். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதைவிட நமக்கு வேறு என்ன வேலை என்று முடிவு செய்து உயிர் தொழில்நுட்பத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்தேன்.
"அதன்பிறகு ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டமும் வாங்கிய பிறகு சென்னையில் உள்ள மருத்துவமனையில் இளநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.
"அப்போதுதான் திடீரென்று விளம்பரப் படங்களில் நடிக்கும் ஆசை மனதில் துளிர்விட்டது," என்கிறார் வித்யா பிரதீப்.
உடனடியாக வீட்டிலும் அலுவலகத்திலும் யாரிடமும் விவரம் சொல்லாமல், தம்மை வைத்து நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாராம். அவற்றைக் கண்ட சில விளம்பர நிறுவனங்கள் இவரைத் தங்களது விளம்பரங்களில் நடிக்க வைத்துள்ளன.
அவற்றைப் பார்த்த இயக்குநர் ஏ.எல். விஜய் தனது 'சைவம்' படத்தில் வித்யாவை நடிக்க வைத்துள்ளார்.
"அவரைச் சந்திக்கும்வரை சினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், நேரில் சந்தித்தபோது இவ்வளவு நல்ல மனிதரா என்று யோசிக்க வைத்தார் ஏ.எல்.விஜய்.
"அதன் பிறகு 'பசங்க -2', 'அச்சமின்றி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கினேன்," என்கிறார் வித்யா பிரதீப்.
தற்போது 'கண்ணகி', 'பவுடர்', 'எக்கோ', 'ஸ்ட்ரைக்கர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறாராம். குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்து படிப்படியாக உயர்ந்து இப்போதுதான் கதாநாயகியாக உயர்ந்துள்ளார் வித்யா. இந்த படிப்படியான வளர்ச்சி தமக்கு மனநிறைவைத் தந்திருப்பதாகவும் சொல்கிறார்.
"மருத்துவமனையில் நான் மேற்கொண்ட ஆராய்ச்சிப் பணிக்கு மத்தியில் கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நடித்தேன். சிறிதாக இருந்தாலும், நல்ல கதாபாத்திரங்கள்தான் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.
"நான் ஏற்று நடித்த சில கதாபாத்திரங்கள் குறித்து நண்பர்கள் சிலர் விமர்சித்தனர். ஆனால் நல்ல அனுபவம் கிடைக்கும் என்பதற்காக அவற்றில் நடித்தேன். நான் காட்டிய பொறுமையும் எனது தேடலும்தான் 'தடம்' படத்தில் கதாநாயகி வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.
"இதற்கு முன்பு 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் வில்லியாக நடித்தேன். மேலும் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளேன். அடுத்து நான்கு நாயகிகளை மையமாக வைத்து உருவாகி வரும் கண்ணகி படத்திலும் நடிக்கிறேன். முழுநேர நடிகையாகிவிட்டாலும், கல்வி, ஆராய்ச்சியில் எனக்குள்ள ஆர்வம் எப்போதும் போகாது," என்கிறார் வித்யா பிரதீப்.
, :
வித்யா பிரதீப்

