'ஜகமே தந்திரம்' படத்தில் பணியாற்றியதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்ததாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இது உலக அளவில் பயணப்படும் படம் என்பதால் தாம் அதிகம் மெனக்கெட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தப் படத்துக்கு இசையமைக்க அதிக நேரம் கிடைத்தது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து இசைக்கலைஞர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். மேலும், மதுரை நாட்டுப்புற இசையையும் பயன்படுத்தி உள்ளேன். இதன்மூலம் இந்தப் படத்தின் இசை நம் மக்களுக்கு அந்நியமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்," என்று தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
'ஜகமே தந்திரம்' படப்பிடிப்பிலும் தாம் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதன்மூலம் தமது இசை எந்தக் காட்சிகளுக்கு எப்படிப் பொருந்தும், எது பொருந்தாது என்பதற்குரிய தெளிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
"இந்த அனுபவம் புதுமையாக இருந்தது. ஓர் இசைக்கலைஞனாக பலவிதமான புதிய முயற்சிகளுக்கு இப்படத்தில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 'ரகிட ரகிட' பாடல்தான் முதன்முறையாக எனது ஒலிப்பதிவு கூடத்திற்கு வெளியே பதிவு செய்யப்பட்ட ஒரு பாடல்.
"அந்தப் பாடல் ஓர் அனுபவ உணர்வின் வெளிப்பாடு. ரசிகர்களும் அதை உணரவேண்டும் என நினைத்தோம். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான மண்ணின் இசையைக் கொண்டு வந்துள்ளோம். எனவே, ரசிகர்கள் இதைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
"ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது நன்றிகள். குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி. அவருடன் இணைந்து பணியாற்றியபோது நூற்றுக்கணக்கான புதிய முயற்சிகளைச் செய்து பார்க்க முடிந்தது," என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள இப்படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ஜோஜோ ஆகியோரும் முக்கியப் பாத்திங்களை ஏற்றுள்ளனர்.
வரும் 18ஆம் தேதி இப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கும் பாடல்களுக்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையரங்கில் வெளியிட முடியாத சூழல் நிலவுவதால் பெரும் தொகையை முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர் இணையத்தில் வெளியிட முன்வந்துள்ளார். இதனால் தனுஷ் மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் படம் வெளியாவதில் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

