இளம் நடிகைகள் முதல் அனுபவ நாயகிகள் வரை பலரும் இப்போது இணையத் தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர்.
திரைப்படங்களைவிட இணையத் தொடர்களில் நடிக்க கூடுதல் சம்பளம் கிடைப்பதே இதற்குக் காரணம். மேலும், சினிமாவைப் போல் பல மாதங்களுக்குக் கால்ஷீட் ஒதுக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் அலுவலகம் செல்வது போல் காலை 9 மணிக்குப் படப்பிடிப்புக்குச் சென்றால் மாலை 6 மணிக்குள் வீடு திரும்பிவிட முடியும் என்பதும் நடிகைகளுக்கு வசதியாக உள்ளது.
மேலும், சவாலான கதாபாத்திரங்களும் கதைக்களங்களும் அமைவது கவனத்தை ஈர்க்கும் கூடுதல் அம்சங்கள்.
'தி ஃபேமிலி மேன்-2' இணையத் தொடரில் நடிக்க சமந்தாவுக்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளம் கொடுத்தது அண்மையில் தெரியவந்தது. இந்நிலையில் புதிய இணையத் தொடரில் நடிக்க அவருக்கு 8 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக வெளியான தகவல் மற்ற நடிகைகளை வாய்பிளக்க வைத்திருக்கிறது.
திரைப்படங்களில் நடிக்க, சமந்தா அதிகபட்சமாக பெறும் தொகை ஒன்றரை கோடியாம். ஆண்டுக்கு மூன்று படங்களில் நடித்தால் கிடைக்கும் தொகையை ஒரு இணையத் தொடரிலேயே சம்பாதித்துவிட முடியும்.
இதையடுத்து நடிகைகள் திரிஷா, ஷ்ருதிஹாசன், அனுஷ்கா, ஹன்சிகா உள்ளிட்டோர் இணையத் தொடர்களின் மீது தங்கள் பார்வையைத் திருப்பி உள்ளனர்.
ஏற்கெனவே காஜல் அகர்வால், நித்யாமேனன், சோனியா அகர்வால், மீனா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் இணையத் தொடர்களில் நடித்து வருகின்றனர்.
இவர்களைத் தவிர நிவேதா தாமஸ், நிவேதா பெத்துராஜ் ஆகியோரும் தமிழ் இணையத் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதால் முன்னணி 'ஓடிடி' நிறுவனங்கள் இணையத் தொடர்கள் தயாரிப்புக்கு என பெருந்தொகையை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக அந்நிறுவனங்கள் ஹன்சிகாவை தான் கால்ஷீட் கேட்டு துரத்தி வருகின்றனவாம். அவரும் சில கதைகளை கேட்டிருப்பதாகத் தகவல். எனினும் மஹா படம் வெளியான பிறகே அவர் இணையத் தொடர்களில் நடிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளார்.
"இணையத்தொடர்கள் தயாரிப்பு அதிகரிப்பதால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, முன்னணி கலைஞர்கள் இணையத் தொடர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அவர்களால் இந்தத் தொடர்களில் பங்கேற்க இயலாவிட்டாலும் அவற்றை விளம்பரப்படுத்தவும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவும் உதவி செய்ய முடியும்.
"இதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது," என்று சொல்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

