சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சில படங்கள் லாபம் பெற்றுத் தராவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதில்லை.
இந்நிலையில், அவர் அடுத்து நடிக்கும் ஐந்து படங்களை பிரபல நிறுவனம் தயாரிப்பதாகவும் இதற்காக அவருக்கு படத்துக்கு தலா 15 கோடி ரூபாய் வீதம், மொத்தமாக 75 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.
எனினும் பெரும் கடன் சுமையில் இருப்பதால்தான் ஒரு நிறுவனத்துக்காக இந்த ஐந்து படங்களிலும் நடிக்கும் ஏற்பாட்டுக்கு சிவா ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சிவாவின் வியாபார மதிப்பு குறைந்துவிட்டதாகவும் அண்மைக் காலமாக ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் உலா வந்தது. ஆனால் இதற்கெல்லாம் அவர் அசரவில்லை. இது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில், அவர் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள 'டான்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்கி உள்ளது. இதற்காக கைமாறிய தொகை 35 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
விஜய், அஜித் போன்ற மூத்த முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு இணையாக சிவா நடித்துள்ள படத்துக்கும் முன்னணி நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்திருப்பது கோடம்பாக்கத்தினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
"இதன் மூலம் தன்னைப் பற்றிய வதந்திகள், ஆருடங்களுக்கு சிவா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.