விஜய் தரப்பு அளித்த விளக்கம்
தனது மகனும் மகளும் சமூக வலைத்தளங்களில் தனிப்பக்கங்களை வைத்திருக்கவில்லை என்றும் அவர்கள் பெயரில் இயங்கும் கணக்குகள் அனைத்தும் போலியானவை என்றும் நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய சில தினங்களாக இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகிய இருவரின் பெயர்களையும் பயன்படுத்தி சில கணக்குகள் துவங்கப்பட்டன. அவற்றில் தொடர்ந்து பல பதிவுகளும் இடம்பெற்றன. இதனால் விஜய் ரசிகர்கள் அந்தப் பக்கங்களைப் பின்தொடர்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் அதிக படங்களும் தகவல்களும் வெளியானதை அடுத்து, இதுகுறித்து விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் விஜய்யின் மகனுக்கும் மகளுக்கும் இன்ஸ்டகிராம் உட்பட எந்தவொரு சமூக வலைத்தளங்களிலும் தனி கணக்கு, பக்கங்கள் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
நிகழ்ச்சி தொகுப்பாளராகும் தமன்னா
விஜய் சேதுபதியைத் தொடர்ந்து நடிகை தமன்னா வும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அதிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அவர் பணியாற்ற இருப்பது குறித்து வெளியான தகவலை அடுத்து, ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் தொடர்பான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார் சேதுபதி. இதற்காக பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அவருக்கு பெருந்தொகையை சம்பளமாகக் கொடுத்திருப்பதாகத் தகவல்.
இந்நிலையில், இதே நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க உள்ளார் தமன்னா. இதன் கன்னட பதிப்பில் 'நான் ஈ' படப் புகழ் சுதீப் தொகுப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார்.
ஏற்கெனவே கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, ஆர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஷால் என பல திரையுலகப் பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளனர்.
இந்திப் பாடல் பாடி அசத்திய ரெபா
'பிகில்' படத்தில் நடித்துள்ள ரெபா மோனிகா ஜான் நல்ல பாடகி என்பது ரசிகர்களுக்கு அண்மையில் தெரிய வந்துள்ளது.
'பிகில்' படத்தில் நடித்த பிறகு தமிழில் 'எஃப்ஐஆர்', 'மழையில் நனைகிறேன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ரெபா. மேலும் கன்னட, மலை யாளப் படங்களிலும் நடிக்கிறார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட காணொளிப் பதிவு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
மறைந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த இந்திப் படத்தின் பாடல் ஒன்றை கித்தார் வாசித்தபடி பாடியுள்ளார் ரெபா. அவரது இனிமையான குரலும் நேர்த்தியாகப் பாடிய விதமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
'மஹா' படத்துக்குத் தடை நீங்கியது
ஹன்சிகா நடித்துள்ள 'மஹா' படத்தை வெளியிட தடை கோரி அதன் இயக்குநர் யு.ஆர்.ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படத்தின் உருவாக்கம், தலைப்பு உள்ளிட்ட எதிலும் இயக்குநருக்கு எந்த உரிமையும் இல்லை என ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். எனினும் பட வெளியீட்டுக்கு முன்னதாக இயக்குநருக்குரிய ரூ.550,000 ஊதியத்தொகையை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.