'த்ரிஷ்யம்-2' மலையாளப் படத்தின் இரண்டாம் பாகம் உலகளவில் முதன்முறையாக சிங்கப்பூர் திரையரங்குகளில் வலம் வர உள்ளது.
சினிமா ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்த படம் 'த்ரிஷ்யம்'. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற தலைப்பில் வெளியாகி வெற்றி பெற்றது.
முதல் பாகம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகமான 'த்ரிஷ்யம்-2' தொடங்குகிறது. கொரோனா நெருக்கடியால் திரையரங்குகள் மூடப்பட்டதை அடுத்து இணையத்தில் (ஓடிடி தளங்கள்) வெளியீடு கண்டு அனைத்துலக அளவில் வெற்றிநடை போட்டு வருகிறது 'த்ரிஷ்யம்-2'.
இந்தியா உட்பட இதுவரை உலகில் வேறெந்த நாடுகளிலும் இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உலகளவில் முதன்முறையாக சிங்கப்பூர் திரையரங்குகளில் இப்படத்தைத் திரையிட உள்ளனர்.
ஆஷிர்வாட் சினிமாஸுடன் இணைந்து சிங்கப்பூர் கொலிசியம் இப்படத்தை சிங்கப்பூரில் வெளியிடுகிறது. இம்மாதம் 25ஆம் தேதி கோல்டன் வில்லேஜ், தெம்பசில் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படும்.
ஜீத் ஜோசப் இயக்கி, தென்னிந்தியாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான மோகன்லால் நடித்து, அந்தோணி பெரம்பவூர் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு உலகளவில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. படத்தின் முதலாம் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகள் மட்டுமின்றி சீன, கொரிய மொழிகளிலும் மறுபதிப்பு செய்யப்பட்டது.