ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வருகிறது 'ஓ... மணப்பெண்ணே'. தெலுங்கில் வெற்றி பெற்ற 'பெல்லி சூப்புலு' படத்தின் தமிழ் மறுபதிப்பாக உருவாகும் படம் இது.
நான்கு தேசிய விருதுகளை வாங்கிக் குவித்ததுடன், நடிகர் விஜய் தேவரகொண்டாவை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படம் என்பதால் இளையர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
"ஒரு திரைப்படம் எப்படி துவங்கி எவ்வாறு முடிக்க வேண்டுமோ, அப்படி அற்புதமாக வெளிப்படுத்திய படம் இது," என்கிறார் தமிழ் பதிப்பின் இயக்குநரான கார்த்திக் சுந்தர். ஏ.எல். விஜய்யின் முதன்மைச் சீடர்களில் இவரும் ஒருவர்.
ஹரிஷும் இவரும் ஒன்றாகப் படித்தவர்களாம். 'பெல்லி சூப்புலு' படத்தைத் திரையில் பார்த்த அந்த நிமிடமே தன் நண்பரை வைத்து இதை தமிழில் மறுபதிப்பு செய்யவேண்டும் என்று முடிவு செய்துவிட்டாராம். அவரது எண்ணம்போல் அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.
"வாழ்க்கையை அதன் போக்கில் அலட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து கடந்து போகும் பையனாக ஹரிஷ் நடிக்கிறார்.
இவருக்கு நேர்மாறாக அக்கறை, பொறுப்பு, லட்சியம் நிறைந்த பெண்ணாக வருகிறார் பிரியா. இவர்கள் இருவரும் சந்திப்பதும் அதன்பின் நடப்பதும் இறுதியாக இருவரும் இணைவதும்தான் கதை.
ஆனால் இவை அனைத்தும் இயல்பாக நடக்கும் என்பதுதான் இக்கதையின் சிறப்பு," என்கிறார் கார்த்திக் சுந்தர்.
பட வேலைகளைத் தொடங்கியபோது இந்த ஜோடிப்பொருத்தம் கச்சிதமாக அமையுமா எனும் சந்தேகம் எழுந்ததாம். ஆனால், இயல்பான நடிப்பால் இருவரும் ஆச்சரியப்பட வைத்ததாகவும் ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்ததாகவும் சொல்கிறார் கார்த்திக் சுந்தர்.
"இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சக மனிதர்கள் மீதான அன்பு கூடும்.
"சிறிதளவும் வன்முறை, ஆபாசம் எதுவும் இல்லாமல் மனதைவிட்டு நீங்காத படமாக இருக்கும். கொரோனா வழிவிட்டதும் 'ஓ... மணப்பெண்ணே' உங்களைச் சந்திக்க வருவாள்," என்கிறார் கார்த்திக் சுந்தர்.
பிரியா பவானி சங்கரைப் பொறுத்தவரை ஒரு காட்சிக்கு என்ன தேவையோ அதைக் கச்சிதமாக தன் நடிப்பில் வெளிப்படுத்துவார் என்று பாராட்டுகிறார் இந்த அறிமுக இயக்குநர்.
அதேபோல் நண்பர் என்ற வகையில் இவருக்கும் ஹரிஷுக்கும் இடையே நல்ல புரிதல் உண்டாம். நேரம் தவறாமை, தொழில் நேர்த்தி ஆகிய தன்மைகள் தன் நண்பரைப் பெரிய உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என்கிறார்.
"பிரியாவிடம் நடிப்பு, அதற்கான பயிற்சி, திட்டமிடல் எல்லாமே கச்சிதமாக இருக்கும். படிப்படியாக உயர்ந்துள்ளார். உணர்வுப்பூர்வமான ஒரு கதையைச் சொல்லும்போது பிரியா போன்ற ஒருவரால் அதைத் திருவிழாவைப் பார்க்கும் அனுபவம் போல் கலகலப்பாக மாற்ற முடியும்.
"ஒரு கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டு அதுவாகவே மாறிவிடும் திறமை அவருக்கு உள்ளது. 'பெல்லி சூப்புலு'வின் மறுபதிப்புகள் மலையாளத்திலும் இந்தியிலும் கூட பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. எனவே, தமிழிலும் வெற்றி பெறவேண்டும் எனும் அழுத்தம் எனக்கு உள்ளது.
"ஒன்று மூலப்படத்தைப் போலவே இருக்க வேண்டும். அல்லது அதைவிட இன்னும் சிறப்பாக உருவாக்க வேண்டும். படத்தை முழுமையாக எடுத்து முடித்த பின்னர் எட்டி நின்று பார்க்கும்போது எடுத்துக்கொண்ட முயற்சிக்கு தகுந்த பலன் இருப்பதாகவே கருதுகிறேன்," என்கிறார் கார்த்திக் சுந்தர்.