மூன்றாம் பாகத்தில் விஜய் சேதுபதி
அண்மையில் வெளியீடு கண்டு சர்ச்சையை ஏற்படுத்திய 'த ஃபேமிலி மேன்' இணையத் தொடரின் மூன்றாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் சமந்தா நடித்திருந்தார். ஈழத்தமிழ் அமைப்புகள் குறித்து இத்தொடரில் மோசமாக சித்திரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது.
சமந்தா உள்ளிட்ட இத்தொடரில் நடித்த அனைவரையும் தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில் இத்தொடரின் மூன்றாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது.
இத்தொடரின் இயக்குநர்கள் தங்களது அடுத்த படைப்புக்காக சில மாதங்களுக்கு முன் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்தி நடிகர் ஷாகித் கபூரும் நடிக்கப் போகும் இத்தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சங்கர் படத்தில் கியாரா அத்வானி
இயக்குநர் சங்கரின் அடுத்த படத்தில் இந்தி நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு முன்னணி நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார் சங்கர்.
தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் இது.
படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், ராம்சரணை தவிர யாரெல்லாம் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை.
நாயகியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆலியா பட், மாளவிகா மோகனன் உட்பட பலரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், பாலிவுட் இளம் நடிகை கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகுமாம்.
இப்படத்துக்காக பல மாதங்கள் கால்ஷீட் ஒதுக்க கியாரா முன்வந்துள்ளதாகவும் அவருக்குப் பெருந்தொகை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.