'ஜகமே தந்திரம்' நேரடியாக இணையத்தில் வெளியானது அதன் நாயகன் தனுஷுக்கு வருத்தம் அளித்திருப்பதாக கூறப்பட்டாலும், ரசிகர்கள் என்னவோ உற்சாகமாகத்தான் உள்ளனர்.
நேற்று முன்தினம் முன்னணி 'ஓடிடி' தளத்தில் வெளியிடப்பட்டது 'ஜகமே தந்திரம்'. வழக்கம்போல் தனுஷ் ரசிகர்களிடம் இருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றிய ஒவ்வொரு தருணத்தையும் தாம் மிகவும் நேசித்ததாக கூறியுள்ளார் தனுஷ்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'ஜகமே தந்திரம்' படத்தில் தமக்கு சுருளி என்ற கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
"உங்களுடன் பணிபுரிந்ததும் மிகவும் கொடூரமான குண்டர் கும்பல் தலைவன் சுருளி கதாபாத்திரத்தில் நடித்ததும் மறக்க இயலாத அனுபவங்கள். உங்களுடன் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்தேன். எல்லாப் புகழும் உங்களையும் படக்குழுவினரையுமே சாரும்," என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.
இந்நிலையில், முதன்முறையாக நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்துத் தளங்களிலும் அசத்தி வருகிறார் தனுஷ்.
தெலுங்கில் பலமுறை வாய்ப்பு கிடைத்தும் இவர் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியவில்லை. இப்போது பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா தன் படத்தில் நடிக்கக் கேட்டு தனுஷை அணுகியுள்ளார்.
நேரடித் தெலுங்குப் படத்தை தமிழிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்ய உள்ளனர். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது 'தி கிரே மேன்' எனும் ஹாலிவுட் படத்தில் நடித்துவரும் தனுஷ், அடுத்து கார்த்திக் நரேன், மாரி செல்வராஜ், 'ராட்சசன்' புகழ் ராம்குமார் ஆகியோருடன் அடுத்தடுத்து இணைந்து பணியாற்ற உள்ளார்.
பின்னர் தமது மூத்த சகோதரர் செல்வராவகன் இயக்கத்திலும் இரண்டு படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே, 'ஜகமே தந்திரம்' படம் வெற்றிபெற 'அவெஞ்சர்ஸ்' ஹாலிவுட் படத்தின் இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாகி உள்ளது இப்படம். தமிழில் வேறு எந்தப் படமும் இதைச் சாதித்துள்ளதா என்பது தெரியவில்லை என தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 'அவெஞ்சர்ஸ்', 'இன்ஃபினிட்டி வார்', 'எண்ட் கேம்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சன் அந்தோணி, ஜோ ரூசோ ஆகிய இருவரும் தனுஷை வாழ்த்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, 'ஜகமே தந்திரம்' குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இதில் கார்த்திக் சுப்புராஜின் வழக்கமான திரைக்கதை பின்பற்றப்படவில்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தனுஷின் இயல்பான, ரசிகர்களை மிரளச் செய்யும் நடிப்புக்காக அவருக்கு மீண்டும் சிறந்த நடிகருக்கான இந்திய திரைப்பட தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக இன்னொரு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, ரஜினியையும் தனுஷையும் வைத்து ஒரு படத்தை இயக்க தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். அதற்கேற்ற கதையை உருவாக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் ரஜினி. அவரை அங்கு சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளாராம் தனுஷ்.
அனேகமாக அந்தச் சமயத்தில் கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கியுள்ள கதையை அவர் ரஜினியிடம் விவரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ரஜினியின் அடுத்த படத்தை தனுஷ் இயக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.