திரைப்படங்களைத் தயாரிப்பதைவிட அதை வெளியிடுவதுதான் பெரிய சவால் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
அதனால் ஒரு படத்துக்கான பணிகளைத் துவங்கும் நாள் முதல் அதன் வெளியீடு வரை பல்வேறு விதமான விளம்பர உத்திகளைக் கையாள வேண்டியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
புதுப்படங்கள் குறித்து அவ்வப்போது ஏதாவது அதிரடியான அல்லது ரசிகர்களைக் கவரக்கூடிய வகையில் புதுப்புது அறிவிப்புகள், தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அத்தகைய சில தகவல்களின் தொகுப்பு இது.
நடிகை ஆண்ட்ரியா (படம்) புதுப்படம் ஒன்றில் கதைக்குத் தேவைப்பட்டதால் அரை நிர்வாணமாக நடித்துள்ளாராம். மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'பிசாசு 2' படத்துக்காக அவர் இவ்வாறு துணிந்து நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் பல அதிரடியான காட்சிகள் இருக்கும் என இயக்குநர் மிஷ்கின் தொடக்கத்திலேயே கூறிவிட்டாராம். கதைக்கேற்ற காட்சி என்றால் தமக்கும் தயக்கமில்லை என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
அண்மையில் கடைசியாக நடத்தப்பட்ட படப்பிடிப்பின்போது குறிப்பிட்ட அரை நிர்வாணக் காட்சியைப் படமாக்கி உள்ளனர்.
அப்போது எந்தத் தயக்கமும் இன்றி அதில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. கடந்த 2019ஆம் ஆண்டில் வெளியான 'ஆடை' படத்தில் நடிகை அமலா பாலும் இவ்வாறு சில காட்சிகளில் நடித்திருந்தார்.
விஜய் நடித்துவரும் 'தளபதி 65' படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி ஜூன் 21ஆம் தேதி (நாளை) வெளியிடப்பட உள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி உள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முதல் தோற்றச் சுவரொட்டி வெளியிடப்படும் என இயக்குநர் நெல்சன் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. மிகக் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் வெற்றிமாறன்.
ஊரடங்கு தளர்வுகள் எத்தனை நாள் நீடிக்கும் என்பது யாராலும் தீர்மானிக்க இயலாது. எனவே கிடைத்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி இரண்டு படங்களை முடிக்கத் திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன்.
தற்போது சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கும் 'விடுதலை' படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது. எனவே, ஊரடங்கு தளர்வுகள் மூலம் கிடைக்கும் அவகாசத்தில் முதற்கட்டமாக இப்படத்தை முடிக்க உள்ளாராம்.
இதற்கிடையே, கமல்ஹாசனும் மீனாவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். மலையாளத்தில் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழில் மறுபதிப்பு செய்ய உள்ளனர். ஏற்கெனவே முதல் பதிப்பு 'பாபநாசம்' என்ற தலைப்பில் உருவாகி வெற்றி பெற்றுள்ளது. அதில் கமலும் கௌதமியும் இணைந்து நடித்திருந்தனர்.
இரண்டாம் பாகத்திலும் கமலே நாயகனாக நடிக்க, கௌதமிக்கு பதில் மீனாவை ஒப்பந்தம் செய்ய உள்ளனர். இருவரும் 1996ஆம் ஆண்டு 'அவ்வை சண்முகி' படத்தில் இணைந்து நடித்தனர்.

