ஒருபக்கம் தெலுங்கில் அசத்திக்கொண்டே மற்றொரு பக்கம் இந்தியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
தற்போது மூன்று இந்திப் படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர் மேலும் சில கதைகளைக் கேட்டு வருகிறாராம். அனேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் மேலும் சில இந்திப் படங்களில் ஒப்பந்தமாவார் என்கிறார்கள் பாலிவுட் விவரப் புள்ளிகள்.
ராஷ்மிகாவின் முதல் படமான 'கிரிக் பார்ட்டி' கடந்த 2016இல் வெளியானது. இந்தப் படத்தின் மொத்த தயாரிப்புச் செலவே நான்கு கோடி ரூபாய்தான். ஆனால், 30 கோடி ரூபாய் வசூல் கண்டது. மேலும் கர்நாடக அரசின் சிறந்த மாநில நடிகைக்கான விருதையும் பெற்றார் ராஷ்மிகா.
இதன் பிறகே தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2018இல் வெளியான 'ஹலோ' தெலுங்குப் படம் தெலுங்கில் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து அவரது வேகத்தையும் வளர்ச்சியையும் தடுக்க யாரும், எதுவும் குறுக்கே வரவில்லை.
தமிழில் இவர் நடித்த 'சுல்தான்' படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் ராஷ்மிகாவுக்கான வாய்ப்புகள் என்னவோ குறைந்ததாகத் தெரியவில்லை.
பெரிய நடிகை என்று பெயரெடுத்து விட்டதால் தேடிவரும் அனைத்து வாய்ப்புகளையும் தாம் ஏற்பதில்லை என்கிறார் ராஷ்மிகா. திரைத்துறைக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் இதுவரை 10 படங்களில் மட்டுமே நடித்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
தனக்கு ஏற்ற கதைகளைத் தேர்வு செய்யும் பொறுமைதான் வெற்றிக்குக் காரணம் என விமர்சகர்கள் சொல்வதை தாம் ஏற்றுக்கொள்வதாகச் சொல்பவர், தற்போது 'புஷ்பா', 'ஆடவாலு', 'மீக்கு ஜோகர்லு' ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்து இந்தியில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்குள் கைவசம் மூன்று இந்திப் படங்கள் வைத்துள்ளார்.
'கிஷன் மஜ்னு' படத்தில் பாலிவுட் இளம் நாயகன் சித்தார்த் மல்ஹோத்ராவுடனும் 'குட்பை' படத்தில் அமிதாப்பச்சனுடனும் நடித்துக்கொண்டிருப்பவர், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஷாஜித் நதியாக்வாலா படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
"இந்த மூன்று படங்களுமே அடுத்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாகும். அதன்பின்னர் நான் இந்திப் பட உலகின் முன்னணி நடிகையாவேன் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி எல்லாம் பெயர் வாங்கவேண்டும் என்பது எனது லட்சியம் அல்ல.
"என்னை வைத்துப் படமெடுப்பவர்கள் நஷ்டமடையக்கூடாது. அதிகம் சம்பாதிக்கும் ஆசையில் ரசிகர்களின் ரசனையை வீணடித்து விடக்கூடாது என்பதில் மட்டுமே எனது கவனம் உள்ளது. தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன்," என்கிறார் ராஷ்மிகா.
இவர் நடித்துவரும் மூன்று படங்களும் வெற்றி பெற்ற பின்னர் ராஷ்மிகாவின் சம்பளம் தெலுங்கில் அவர் பெறுவதைவிட இரு மடங்காகும் என்கிறார்கள் இந்தித் திரையுலக விவரப் புள்ளிகள். தெலுங்கில் ராஷ்மிகா குறைந்தபட்சம் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்தி நடிகை டாப்சி உற்சாகத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார். இவர் நடித்த ஆறு இந்திப் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதுதான் இவரது மகிழ்ச்சிக்குக் காரணம். இதனால் 5 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர், இப்போது எட்டு கோடி ரூபாய் கேட்கிறாராம். நல்ல கதைக்கரு உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார் டாப்சி.
தற்போது 'ரேஷ்மி ராக்கெட்' என்ற படத்தில் நடித்து வருபவர், இது விளையாட்டுத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அலசும் கதை என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார். தமிழ் இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதியுள்ள கதையை ஆகாஷ் குரானா இயக்கி உள்ளார். இந்தப் படம் தனது திரையுலகப் பயணத்தில் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என்கிறார் டாப்சி.

