'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கலாம் என்று பச்சைக்கொடி காட்டி உள்ளாராம் விஜய். இதையடுத்து சென்னை வடபழனியில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் துவங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஜார்ஜியா நாட்டில் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்த பிறகு சென்னையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தார் இயக்குநர் நெல்சன்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பணிகள் முடங்கிப்போயின. இதனால் முதலில் வருத்தமடைந்த விஜய் ரசிகர்கள் மனதைத் தேற்றிக்கொண்டு அவரது பிறந்தநாளைக் கொண்டாட தயாராகி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நன்கு கட்டுக்குள் வந்துள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் ஜூலை மாதம் படப்பிடிப்பைத் துவங்க சம்மதித்துள்ளார் விஜய்.
இதற்கிடையே 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களைத் தொடர்ந்து 'தளபதி 65'க்கும் வித்தியாசமான தலப்பு வைக்க தனது குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார் நெல்சன். இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக சென்னை வடபழனி பகுதியில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணி முடிவுக்கு வந்திருக்கிறதாம்.
முன்னதாக செப்டம்பரில் படப்பிடிப்பை நடத்தலாம் என்று முடிவு செய்திருந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதற்கு முன்பாகவே பணிகள் தொடங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இம்முறை ஆகக் குறைந்த தொழிலாளர்கள், தொழில்நுட்பக் குழுவை வைத்துக் காட்சிகளைப் படமாக்க உள்ளனர். முதலில் விஜய்யும் கதாநாயகி பூஜாவும் இணைந்து நடனமாடும் பாடல் காட்சிதான் எடுக்கப்படுகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் படத்தை முடித்து ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் வருடப் பிறப்புக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
இதற்கிடையே அஜித்தின் 'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் வேகமெடுத்துள்ளன. இப்படத்தில் தெலுங்குத் திரையுலக நாயகன் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதும் 'வலிமை' படத்துக்காக 'சிக்ஸ் பேக்' உடற்கட்டோடும் தயாராகி உள்ளார் என்பதும் தெரிந்த சங்கதிகள்.
படப்பிடிப்பு முடியும்வரை கடும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி வருகிறார். அவரது அர்ப்பணிப்பைக் கண்டு நெகிழ்ந்துபோன அஜித், கடைசி நாள் படப்பிடிப்பின்போது தன் கைப்பட பிரியாணி தயாரித்து கார்த்திகேயாவுக்கு விருந்து வைத்துள்ளார்.
'இன்று ஒருநாள் எனக்காக உங்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கைவிட்டே ஆகவேண்டும்' என்று வற்புறுத்தி, தாமே பிரியாணியைப் பரிமாறி கார்த்திகேயாவை அன்பால் திக்குமுக்காட வைத்தாராம் அஜித்.
'வலிமை'யில் ஐந்து அதிரடியான சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் மூன்று சண்டைகள், துரத்தல் காட்சிகளை ஹைதராபாத்திலும் மீதமுள்ள இரண்டு சண்டைகளை சென்னையிலுமாக படமாக்கி உள்ளனர்.
அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 'வலிமை' முழுத் தெம்புடன் வெளியீடு காணத் தயாராகிவிடும் என படத் தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.

