'பெண்களால் சாதிக்க முடியும்'
ஆணாதிக்கம் என்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது என்றும் அது முதலில் குடும்பத்தில் இருந்துதான் வருகிறது என்றும் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.
தனது குடும்பத்திலும் இத்தகைய நிலை இருந்ததாக அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"பெண் உரிமை குறித்து எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் அந்த உரிமை இல்லை. பெண்கள் சமையல் அறைக்கு உள்ளேதான் இருக்க வேண்டும் என்றும், சமையல் செய்வதுதான் அவர்கள் வேலை என்றும் சொல்வது சரியல்ல.
"பெண்களால் பலவற்றைச் சாதிக்க முடியும். நான் சமையல் செய்ய கற்றுக்கொள்ளவில்லை. எனக்குப் பிடிக்காததைச் செய்யச் சொல்லி வற்புறுத்த வேண்டாம் என என் தாயாரிடம் சிறு வயதிலேயே கறாராக கூறிவிட்டேன்," என்று வித்யா பாலன் மேலும் தெரிவித்துள்ளார்.
மதுப்பழக்கத்தைக் கைவிட்ட சிம்பு
மதுப் பழக்கத்தில் இருந்து தாம் முழுமையாக விடுபட்டு விட்டதாக நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
கடந்த ஓராண்டாக தாம் மதுவை தொடவில்லை என்றும் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில் 'மாநாடு' படக்குழுவைச் சேர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மதுப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது என்று சிம்பு குறிப்பிட்டார். மேலும், நடிகர் பிரேம்ஜி உள்ளிட்டோர் உடன் இருந்தும் கூட தாம் ஓராண்டு காலம் மது அருந்தாமல் இருந்தது மிகப்பெரிய விஷயம் என்றும் நகைச்சுவையாக கூறினார்.
'மாநாடு' படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. இதில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.