நயன்தாராவிடம் தமக்குப் பிடித்தமான விஷயம் அவரது தன்னம்பிக்கைதான் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
இன்ஸ்டகிராமில் ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தாம் இயக்கிய 'லவ் பண்ணா உட்றனும்' குறும்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
"நயன்தாரா பல வெற்றிப்படங்களைத் தந்துள்ளார். முன்னணி நடிகையாக உள்ளார். அவரது தன்னம்பிக்கைதான் இதன் பின்னணியில் உள்ளது. அதனால் அது என்னைக் கவர்ந்துள்ளது," என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
சாதி ஆணவக் கொலைகளை மையமாக வைத்து உருவான 'பாவக் கதைகள்' என்கிற ஆந்தாலஜி (குறும்படங்களின் தொகுப்பு) அண்மையில் வெளியானது. இதில் கவுதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா ஆகியோருடன் சேர்ந்து விக்னேஷ் சிவனும் பங்கேற்றார்.
இவரது 'லவ் பண்ணா உட்றனும்' பகுதி மட்டுமே நகைச்சுவையுடன் உருவாகி இருந்தது. அதில் அஞ்சலி இரட்டை வேடங்களிலும் கல்கி கேக்லா, பதம் குமார் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். பலரும் இக்குறும்படத்தைப் பாராட்டி உள்ளனர். இந்நிலையில் அதன் இரண்டாம் பகுதியை எடுக்க திட்டமிட்டுள்ளார். இதில் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும்.

