ஊரடங்கு தளர்வுகளை அடுத்து திரைப்படப் பணிகளை, குறிப்பாக படப்பிடிப்பைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து கோடம்பாக்கத்தில் எங்கு பார்த்தாலும் உற்சாகம் தென்படுகிறது. அதிகபட்சமாக நூறு பேர் கொண்ட படக்குழுக்கள் படப்பிடிப்பில் ஈடுபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சின்னத்திரை படப்பிடிப்பும் பணிகளும் தொடங்க உள்ளன. சென்னை மட்டும் அல்லாமல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் வெளிப்புறப் படப்பிடிப்பை நடத்த முடியும்.
கூடுமானவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட தொழிலாளர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் படப்பிடிப்பில் பங்கேற்கச் செய்யவேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
குறைந்த செலவில் உருவாகி வரும் படங்களின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொருளாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானோர் உள்ளரங்கில் காட்சிகளைப் படமாக்க விரும்புவதாகவும் தற்போதைய சூழலில் வெளிப்புறப் படப்பிடிப்பைத் தவிர்க்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸ் அரங்கில் நடக்க உள்ளது. ஜூலை முதல் வாரம் தாம் தயாராக இருப்பதாக விஜய் கூறியுள்ளார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இயக்குநரும் தயாரிப்பாளருமான சி.வி. குமார் தனது 'மாயவன்-2' பட வேலைகளை செப்டம்பரில் துவங்க உள்ளார்.
மேலும் 'பீட்சா-3', 'கொற்றவை' ஆகிய படங்களுக்கான பணிகள் அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அஜித்தின் 'வலிமை' படத்தின் சில காட்சிகள், நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக அறிமுகமாகும் படம், ஆகியவற்றுக்கான படப்பிடிப்புகளும் தொடங்க உள்ளன.
அநேகமாக ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என கோடம்பாக்கத்தில் நம்பிக்கை நிலவுகிறது.
எனவே, ஊரடங்கு தளர்வுகளை நல்ல வாய்ப்பாகக் கருதி இப்போதே அனைத்துப் பணிகளையும் முடித்துவிட வேண்டும் என பல படக்குழுவினர் முழு வீச்சில் களமிறங்குகின்றனர்.
இதற்கிடையே ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ரஜினி அமெரிக்கா புறப்படும் முன்பு தனக்குரிய அனைத்துக் காட்சிகளிலும் நடித்து முடித்துவிட்டார்.
இந்நிலையில் படத்தைப் பார்வையிட்ட தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், குறிப்பிட்ட ஓரிடத்தில் பாடல் காட்சி ஒன்று இடம்பெற்றால் கதையோட்டம் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கருதுவதாகச் சொன்னாராம். அதை ஏற்றுக்கொண்டு ரஜினியிடம் விவரம் கூறியுள்ளார்.
'ஒரு பாடல்தானே, எடுத்துவிடலாம்' என்றாராம் ரஜினி. இந்தப் பாடல் காட்சி அமெரிக்காவில் படமாக்கப்படவும் வாய்ப்புண்டு.

