ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் 'தலைவி' படத்தில் நடித்து முடித்துள்ள கங்கனா ரணாவத், அடுத்து காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்துக்கு 'எமர்ஜென்சி' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
புதிய கதாபாத்திரத்துக்காக முழு உடல் பரிசோதனை செய்து கொண்டாராம் கங்கனா.
ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு புதிய பயணத்தின் அழகிய தொடக்கம் என்று கூறுகிறார் கங்கனா.
இதுகுறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
"மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக உடல், முகப் பரிசோதனை செய்து கொண்டேன். இந்தப் பரிசோதனை மிக அவசியம்.
"இதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கனவை நனவாக்க பல அற்புதமான கலைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர். இது சிறப்புமிக்க ஒரு பயணமாக இருக்கப் போகிறது. அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது," என்கிறார் கங்கனா.
'தலைவி' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. கங்கனாவைப் பொருத்தவரை அண்மைக் காலமாக தொடர்சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பல்வேறு விஷயங்கள் குறித்து இவர் தெரிவிக்கும் கருத்துகளுக்கு ஒருபக்கம் கடும் எதிர்ப்பு, மற்றொரு பக்கம் ஆதரவு என இரண்டும் கிளம்புகின்றன.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையப்படுத்தி இவர் நடிக்க இருக்கும் படமும் புது சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

