தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக ரசிகர் ஒருவர் 900 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டதை அறிந்து நெகிழ்ந்து போயுள்ளார் ராஷ்மிகா.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்ற அந்த ரசிகர், ராஷ்மிகாவின் சொந்த ஊருக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக 900 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்ட பின்னரும், அவரால் ராஷ்மிகாவின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அங்குமிங்குமாக அலைந்து திரிந்த அவரைப் பற்றி போலிசாருக்கு தகவல் கிடைக்க, அவரிடம் விசாரணை நடந்துள்ளது. பிறகு அவருக்கு அறிவுரை கூறி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, மும்பையில் படப்பிடிப்பில் இருந்த நடிகை ராஷ்மிகாவுக்கு இதுகுறித்த தகவல் தெரியவந்தது. அவர் உடனடியாக இதுபற்றி பதிவிட்டார்.
"என்னை சந்திக்க வெகு தூரம் பயணம் செய்திருக்கிறீர்கள். உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. இருப்பினும் ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அதுவரை உங்கள் இடத்தில் இருந்தே அன்பு செலுத்தினால் மகிழ்வேன். தயவு செய்து இனி இதுபோல் செய்யவேண்டாம்," என்று ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.

