ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்தாலும் பரவாயில்லை, அது தரமான படைப்பாக இருக்க வேண்டும் என விரும்புவதாகச் சொல்கிறார் ஸ்ரீ பிரியங்கா.
'கங்காரு', 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது இரண்டு புதுப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஸ்ரீ பிரியங்கா நடித்த 'மிக மிக அவசரம்' படத்தால் ஒரு நன்மை விளைந்துள்ளது. தமிழகத்தில் இனி பெண் காவலர்கள் சாலை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்பதே அது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
கொரோனா பாதிப்புகள் குறித்து கேள்விப்பட்டு மனம் நொந்து போயிருந்த வேளையில், இந்த அறிவிப்பு தமக்கு ஆறுதல் அளித்துள்ளதாகச் சொல்கிறார் ஸ்ரீ பிரியங்கா.
தமிழகத்தில் முதல்வர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் செல்லும் இடங்களில் சாலைப்பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இது அவர்களுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.
சில சமயங்களில் குடிக்க தண்ணீர்கூட கிடைக்காது. இயற்கை உபாதைகளின்போதும் கூட பெரும் சங்கடங்களை எதிர்கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் காவலரின் அவதிகளை விவரிக்கும் வகையில் 'மிக மிக அவசரம்' படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இவர் தற்போது சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்தை தயாரிக்கிறார்.
"லாப நோக்கம் ஏதுமின்றி அவர் இயக்கிய இந்தப் படம் ஈர மனம் உள்ள, பெண்கள் மீது மரியாதை கொண்ட எவரையும் நிச்சயம் பாதிக்கும்," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
கதைப்படி, இப்படத்தில் சாமந்தி என்ற பெண் காவலராக நடித்திருந்தார் பிரியங்கா. தமக்கு இப்படியொரு வாய்ப்பை அளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவிப்பதாக நெகிழ்கிறார்.
தற்போது புதுவையில் வசிக்கும் ஸ்ரீ பிரியங்காவுக்கு அங்குள்ள திருக்கனூர்தான் சொந்த ஊராம். தந்தை குணசேகரன் அங்கு பழரசக் கடை வைத்துள்ளார். தாய் பூங்கொடி, மூத்த சகோதரர் குமார், ஸ்ரீ பிரியங்கா என சிறிய குடும்பம்.
"இந்தக் கதாபாத்திரத்தை சவாலாக ஏற்று நடித்தேன். உண்மையில் நான் எனது கதாபாத்திரங்களுக்காக எந்தப் பயிற்சியும் மேற்கொள்வதில்லை. அப்படிச் செய்தால் செயற்கைத்தனமாக இருக்கும் என்பது என் கருத்து.
"பெண் காவலர்களுக்கு ஏதாவது நன்மை விளைய வேண்டும் என்று படப்பிடிப்பின்போது தோன்றியது. அந்த வகையில் தமிழக அரசின் அறிவிப்பால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளோம்.
"நான் நடிகையாகாமல் ஒரு பெண் காவலர் சாமந்தியாக இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பேனோ அப்படித்தான் திரையில் என்னை வெளிப்படுத்தினேன். இதற்காக எந்த நடிகையையும் நான் பின்பற்றவில்லை. எனக்குத் தோன்றிய வகையில் நடித்தேன். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
"மாற்றம் வரவேண்டும் என்று நினைத்து உழைத்தோம். அது வந்துள்ளது," என்கிறார் ஸ்ரீ பிரியங்கா.
நார்வே திரைப்பட விழாவில் இவருக்குச் சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதை இப்படத்துக்கான மற்றொரு அங்கீகாரமாகக் கருதுகிறாராம்.
"இந்த ஆண்டு அந்த விருது என் கைக்கு வரும் என நம்புகிறேன். உண்மையைப் பிரதிபலிக்கும் இப்படிப்பட்ட படங்களில் நடிக்க முன்னுரிமை அளிப்பேன்," என்கிறார் ஸ்ரீ பிரியங்கா.
, :
ஸ்ரீ பிரியங்கா

