கோடம்பாக்கத்தில் வெகு விரைவில் பணிகள் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன.
இந்நிலையில் 'ஓடிடி' தளங்களின் வளர்ச்சியால் திரைப்படங்களைத் தயாரிக்கும் பாணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் சொல்கிறார்கள்.
தற்போது கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் 'மார்க்கெட்' இழந்த நடிகைகளுக்கும்கூட வாய்ப்புகள் தேடி வருகின்றன.
இன்னொரு பக்கம் ஜோதிகா, நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை இணையத் தொடர்களில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் முன்னணி நடிகர்களை வைத்துப் படமெடுக்கும்போது கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பது, பிரம்மாண்ட அளவில் செலவு செய்வது ஆகியவற்றால் பல தயாரிப்பாளர்கள் கயிறு மேல் நடப்பதாக உணர்கிறார்களாம்.
படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்தாலும் அதன் வியாபாரத்துக்காக இன்னும் அதிகமாக மெனக்கெட வேண்டி உள்ளது.
திரையுலகம் சார்ந்த பணப்பஞ்சாயத்துகள், கொரோனா போன்ற எதிர்பாராத தடைகள் ஆகியவற்றையும் சமாளிக்க வேண்டி உள்ளது. திரையரங்குகளைப் பிடிப்பது மற்றொரு போராட்டம்.
இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்க்கும் தயாரிப்பாளர்கள், கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் கதைகளாகத் தேர்வு செய்து இந்நாள், முன்னாள் கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்து, குறைந்த செலவில் படத்தை தயாரிக்க விரும்புகிறார்களாம். ரசிகர்களிடம் பெயர் வாங்க முடியும் என்பதால் பெரும்பாலான கதாநாயகிகள் குறைவான சம்பளத்துக்கு ஒப்புக்கொள்கிறார்கள்.
"இத்தகைய படங்களை முன்னணி 'ஓடிடி' நிறுவனங்களும் ஆர்வத்துடன் வாங்கி வெளியிடுகின்றன. இந்த நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை தயாரிப்பாளர்களால் எளிதில் நிறைவேற்ற முடிகிறது. மேலும் வியாபார உத்தரவாதமும் இருப்பதாகக் கருதுகிறார்கள். அந்த வகையில் சில முன்னணி நாயகிகள் நடிப்பில் உருவாகி வெளியீடு காணத் தயாராக உள்ள சில திரைப்படங்கள் 'ஓடிடி'யில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
இதனால் தற்போது கோடம்பாக்கத்தில் நாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 'நெற்றிக்கண்' படத்தில் நயன்தாரா கண்பார்வை அற்றவராக நடிக்கிறார். இதில் நாயகன் என்று யாருமில்லை. படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் திரை காண்கிறது.
திரிஷா நடிக்கும் 'கர்ஜனை', 'ராங்கி' ஆகிய படங்கள் முன்னணி 'ஓடிடி' நிறுவனத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாம். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் 'பூமிகா', ரெஜினா நடிக்கும் 'சூர்ப்பனகை', காஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஆகியவையும் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்கள்தான்.
இதற்கிடையே பல கதாநாயகிகள், நாயகர்கள் தேவைப்படாத படங்களில் நடிப்பதால் மற்றொரு சிக்கல் எழுந்துள்ளது. இளம் நாயகிகளும் மற்ற கதாநாயகிகளும் முன்னணி நடிகர்களுடன் இணையும்போது சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளும்படி தயாரிப்புத் தரப்பு நச்சரிக்கிறதாம்.
"இணையத் தொடர்களிலும் தனி நாயகி உள்ள படங்களிலும் நடிக்கும் நடிகைகளால் தயாரிப்பாளர்களுக்குப் பெரிய லாபம் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் உங்களைவிட குறைவான சம்பளம்தான் வாங்குகிறார்கள்," என்று தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்களாம்.
கீர்த்தி சுரேஷ்
, :

