நடிகைகள் அதிக சம்பளம் கேட்டால் மட்டும் அதை சர்ச்சையாக்குகிறார்கள் என்கிறார் டாப்சி.
இது தமக்கு வருத்தமளிப்பதாகவும் நடிகைகளும் திறமைசாலிகள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சி, அண்மையில் நடித்த படங்கள் அனைத்துமே விமர்சன, வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதையடுத்து அவர் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியானது. கொரோனா நெருக்கடி வேளையில் அவரது இந்தச் செயல்பாடு ஏற்க முடியாதது என சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். இதனால் தாம் வருத்தமும் கோபமும் அடைந்ததாக சொல்கிறார் டாப்சி.
"திரையுலகில் நடிகர், நடிகைகள் இடையே நிறைய பாகுபாடு நிலவுகிறது. ஒரு நடிகை தன் உழைப்புக்கேற்ற சம்பளத்தைக் கேட்டால் உடனே விமர்சனத்துக்கு ஆளாகிறார். அவர் சர்ச்சைக்குரியவராக, சிக்கல் நிறைந்தவராக சித்திரிக்கப்படுகிறார்.
"ஆனால், ஒரு நடிகர் தன் சம்பளத்தை உயர்த்தும்போது யாரும் வாய் திறப்பதில்லை. காரணம், நடிகர்கள் தங்கள் படத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் சம்பளத்தை உயர்த்துவதாகக் கருதுகிறார்கள். மேலும் சம்பள உயர்வு என்பது இந்த வெற்றிக்கான அங்கீகாரம் என்றும் சித்திரிக்கப்படுகிறது. என்னுடன் ஒரே காலகட்டத்தில் நடிக்க வந்த நடிகர்கள் இப்போது என்னைவிட அதிகம் சம்பாதிக்கின்றனர்," என்கிறார் டாப்சி.
தம்மை சர்ச்சைக்குரிய நடிகை என்று சொல்வது குறித்து தாம் கவலைப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், சமூகம் சார்ந்த விஷயங்கள் குறித்து கருத்து சொல்லவும் தாம் தயங்கியதே இல்லை என்கிறார்.
டாப்சிக்கு இந்தியில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. அதேசமயம் பிற மொழிப் படங்களிலும் நடிக்க விரும்புகிறாராம்.
இந்தியில் இந்தியக் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் 'சபாஷ் மித்து', தமிழில் ஜெயம் ரவியுடன் 'ஜன கன மன' படத்தில் நடிப்பவர், தெலுங்கில் உருவாகும் 'மிஷன் இம்பாசிபிள்' படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். பிறமொழிகளில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன.
பரபரப்பான திரைவாழ்க்கைக்கு மத்தியில் தாம் திருமணம் குறித்தெல்லாம் ஏதும் யோசிக்கவில்லை என்று சொல்பவர், திருமணம் குறித்து எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இப்போதைக்கு இல்லை என்கிறார். அதேசமயம் தன் பெற்றோர் விரும்பாத ஒருவரைத் திருமணம் செய்ய வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்.
"எத்தகைய ஒருவருடன் நட்பு அல்லது உறவு பாராட்டினாலும் அது எதிர்காலத்திலும் நீடிக்க வேண்டும் என விரும்புவேன். இல்லையெனில் ஒருவருடன் நேரத்தை செலவிடுவது வீண் வேலை என்று நினைப்பேன்.
"பொழுதுபோக்குக்காக ஒருவரிடம் பழகுவது எனக்குப் பிடிக்காத ஒன்று. நான் திருமணம் செய்பவரை என் பெற்றோருக்கும் பிடிக்க வேண்டும். என் பெற்றோரையும் மதித்து ஏற்கும் ஒருவரைத்தான் நான் வாழ்க்கைத் துணையாக அடைவேன்," என்று சொல்லும் டாப்சி, அண்மைக் காலமாக திருமணம் செய்துகொள்ளுமாறு பெற்றோர் தம்மை வற்புறுத்துவதையும் ஒப்புக் கொள்கிறார். எங்கே கடைசிவரை தங்கள் மகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்து விடுவாளோ என்று அவர்களுக்குப் பயம் இருப்பதாகச் சொல்கிறார்.
"தற்போது நிறைய பட வாய்ப்புகள் தேடிவருகின்றன. நடிப்புத் துறையில் சில மைல் கற்களை எட்டிப்பிடிக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளேன். அவற்றை அடைந்ததும் எனது சினிமா பயணத்தின் வேகம் குறையக்கூடும். இப்போது ஆண்டுக்கு 6, 7 படங்களில் நடிக்க விரும்புகிறேன் எனில் எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்றாகக் குறையக்கூடும். அப்போதுதான் திருமணம் குறித்து யோசிப்பேன்," என்று தெளிவாகப் பேசுகிறார் டாப்சி.
கொரோனா இரண்டாவது அலை இவரை மனதளவில் வெகுவாகப் பாதித்துவிட்டதாம். இவர் நடித்து வெற்றிபெற்ற 'ராஷ்மி ராக்கெட்' படத்தின் இயக்குநர், நெருங்கிய தோழியின் பாட்டி தாத்தா உள்ளிட்ட பலரை இழந்துவிட்டதாகச் சொல்கிறார்.
"அதில் இருந்து மீண்டுவர முயற்சி செய்து வருகிறேன். எல்லோரும் கவனமாக இருங்கள் என்று மட்டுமே சொல்லமுடிகிறது," என்கிறார் டாப்சி.
, :
டாப்சி

