'தி ஃபேமிலி மேன்' தொடரின் மூன்றாம் பகுதியில் தாம் நடிக்கவில்லை என்பதை விஜய் சேதுபதி நாசுக்காகத் தெரிவித்துள்ளார்.
அந்த இணையத் தொடர் ஈழத்தமிழர்களையும் அவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதாக எதிர்ப்பு கிளம்பியது.
இந்த இணையத் தொடரை தடை செய்யவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் 'தி ஃபேமிலிமேன்' மூன்றாம் பாகம் உருவாகிறது என்றும் அதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. இதனால் தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து விலகினார் சேதுபதி.
இந்நிலையில் 'தி ஃபேமிலி மேன்' மூன்றாம் பாகத்தில் நடிக்கவில்லை என அவர் நாசூக்காகத் தெரிவித்துள்ளார்.
"நான் இந்தி நடிகர் ஷாகித் கபூருடன் இணைந்து இணையத்தொடர் ஒன்றில் நடிக்கிறேன். ஆனால் மனோஜ் பாஜ்பாயுடன் இணைந்து எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. எனினும் அவருடன் இணைந்து நடிக்கும் ஆர்வம் உள்ளது," என்று சேதுபதி தெரிவித்துள்ளார்.
'தி ஃபேமிலி மேன்' தொடரில் மனோஜ் பாஜ்பாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. அவருடன் இணைந்து நடிக்கவில்லை என்று தெரிவித்ததன் மூலம் சர்ச்சைக்குரிய தொடரில் தாம் நடிக்கவில்லை என்பதையும் உணர்த்தியுள்ளார் விஜய்சேதுபதி.

