லாபம், நஷ்டம், சுமார் வெற்றிப்படைப்பு என தாம் நடிக்கும் படங்கள் தொடர்பில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறார் தனுஷ். எனினும் அவரது வேகம் குறைந்ததாகத் தெரியவில்லை.
வெற்றி, தோல்வி பற்றி கவலைப் படாமல் திறமைசாலிகளுடன் இணைந்து செயல்படுகிறார். படத்துக்குப் படம் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற அவரது தாகமும் செயல்பாடுகளும்தான் அவருடன் இணைந்து பணியாற்றத் தூண்டுகிறது என்கிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள்.
அந்த வகையில் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமது மூத்த சகோதரர் செல்வராகவன் இயக்கத்தி்ல் நடிக்க உள்ளார் தனுஷ். கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு முதலில் 'நானே வருவேன்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பூசை போட்ட கையோடு முதல் தோற்றச் சுவரொட்டியும் வெளியிடப்பட்டது.
அண்ணனும் தம்பியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ளனர் என்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் எகிறிக் கிடக்கிறது.
வெளியீட்டு உரிமையைப் பெற பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 'நானே வருவேன்' என்ற தலைப்பை செல்வராகவன் மாற்ற விரும்புவதாக ஒரு தகவல் அண்மையில் வெளியானது. 'ராயன்' என்பதுதான் புதுத்தலைப்பு என்றும் கூறப்பட்டது. ஆனால் திடீரென 'இப்படத்தின் தலைப்பு மட்டும் மாறவில்லை, கதையே மாறுகிறது' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
தனுஷுக்கு ஏற்ப வடசென்னையை மையப்படுத்தி புதுக்கதையை அமைத்துள்ளாராம் இயக்குநர் செல்வா. இது மூன்று அண்ணன், தம்பிகளுக்கு இடையே நடைபெறும் கதை என்றும் தனுஷின் தம்பியாக நடிக்க விஷ்ணு விஷாலிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல். அநேகமாக வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கக்கூடும்.
ஏன் இந்த திடீர் மாற்றம்?
"இயக்குநர் எடுத்த முடிவை தனுஷ் ஏற்றுக்கொண்டார். புதிய மாற்றங்களில் அவருக்கும் உடன்பாடு உள்ளது," என்கிறது அவரது தரப்பு.
செல்வா முதலில் சொன்ன 'நானே வருவேன்' கதை திகில் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததாம். அதனால் செல்வா இதற்கு முன்பு இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' சாயல் இருப்பதாக தயாரிப்புத் தரப்பி்ல் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
எனவே உடனடியாக தமது உதவியாளர்களுடன் விவாதம் நடத்தி, 'புதுப்பேட்டை' போன்று அதிரடியான ஒரு கதையை எழுதி வடசென்னையை மீண்டும் கதைக் களமாக அமைத்துக்கொண்டுள்ளார் செல்வராகவன்.
தனுஷ் கைவசம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இவற்றுள் எந்தப் படம், யாருடைய இயக்கத்தில் வெளியாகும் என்பதை அவர்தான் தீர்மானிக்க இயலும் என்கிறார்கள். மேலும், ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு, 'பட்டாஸ்', 'அசுரன்' என ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்த அனுபவம் அவருக்கு உள்ளது.

