தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் அடுத்து நடிக்க உள்ள படங்கள், அவர்களின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த தொகுப்பு இது.
எப்போதும் கலகலப்பான கதைக்களங்களில் நடிக்க விரும்புவார் ஆர்யா. அதேசமயம் திடீர் திடீரென விறுவிறுப்பான, சவாலான பாத்திரங்களிலும் அவரைப் பார்க்க முடியும்.
தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள ஆர்யா, அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது நேரடித் தெலுங்குப் படமாக உருவாகிறது. இதில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார் என்பதுதான் சிறப்பம்சம். 'சார்பட்டா' பெரிய தொகைக்கு விற்பனையானதும், அப்படத்தில் ஆர்யா வெளிப்படுத்தி உள்ள நடிப்புக்காக அவருக்குப் பல விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வில்லனாக நடிக்க அவர் ஒப்புக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்துக்காக வலுவான வில்லன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
அதுகுறித்து ஆர்யாவிடம் அண்மையில் லிங்குசாமி விவரிக்க, அடுத்த நிமிடமே இதில் நடிக்க தான் தயார் என்றாராம் ஆர்யா. மிக விரைவில் அவர் படப்பிடிப்பில் இணைய உள்ளதாகத் தகவல். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடிக்கும் படம் 'டான்'.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூசையுடன் தொடங்கியது. கோயம்புத்தூரில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. எனினும் கொரோனா ஊரடங்கால் பணிகள் முடங்கின. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்நிலையில், 'டான்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்குகிறது.
ஒருவழியாக எஸ்.ஜே. சூர்யாவையும் இணையத்தொடர் பக்கம் அழைத்து வந்துள்ளனர். 'மாநாடு', 'டான்', 'பொம்மை', 'கடமையை செய்', 'இறவாக்காலம்' உட்பட பல படங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. பல இயக்குநர்கள் இணையத் தொடர்களில் நடிக்கக் கேட்டு அணுகியபோது மறுத்துவிட்டார்.
இந்நிலையில், 'கொலைகாரன்' பட இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸின் தொடரில் மட்டும் நடிக்க சம்மதித்துள்ளாராம். காரணம் ஆண்ட்ரூ சொன்ன கதை. அது மிகவும் பிடித்துப் போனதால் நடிக்க முன்வந்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.
இந்த இணையத் தொடரை 'விக்ரம் வேதா' படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இருவரும் தயாரிக்கின்றனர்.
தமிழில் வெற்றிபெற்ற 'ராட்சசன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தெலுங்கில் உருவாகிறது. இதில் விஜய் சேதுபதி நாய கனாக நடிக்கிறார். சேதுபதியைப் பொறுத்தவரை தமிழ் அல்லாமல் பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்க அவர் தயங்குவதில்லை.
'ராட்சசன்' படம் கடந்த 2019ல் தெலுங்கில் 'ராட்சசுடு' என்ற பெயரில் மறுபதிப்பு செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில், 'ராட்சசுடு' படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய ரமேஷ் வர்மாவே மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார். இதில்தான் சேதுபதி ஒப்பந்தமாக உள்ளார்.
அவர் ஏற்கெனவே தெலுங்கில் 'சைரா நரசிம்மா ரெட்டி', 'உப்பென்னா' படங்களில் நடித்துள்ளார்.
விஷ்ணு விஷால் நடித்து வரும் 'எஃப்ஐஆர்' படத்தின் பாடலை நாளை வெளியிட உள்ளனர். இது அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் கைவண்ணத்தில் உருவாகிறது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா, ரெபா மோனிகா நடித்துள்ளனர்.
மேலும், இயக்குநர் கௌதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் 'பயணம்' என்ற பாடலை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இளன் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இவர் இயக்கும் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார்.
, :
ஆர்யா

