ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் 'வாடிவாசல்'. எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் இந்த படைப்பை திரைப்படமாக்குகிறார் வெற்றிமாறன்.
சூர்யா நாயகனாக நடிக்கும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
நாவல்களை அடிப்படையாகக் கொண்டு படங்களை உருவாக்குவதில் வெற்றிமாறனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
இதையடுத்து 'வாடிவாசல்' நாவலை திரைப்படமாக்குவதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த நாவலை பதிப்பித்துள்ள காலச்சுவடு பதிப்பகம், வெற்றிமாறன், சி.சு.செல்லப்பாவின் மகன் சுப்ரமணியன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
"அப்பா எழுதிய வாடிவாசல் நாவல் வெளியானபோது எனக்கு இரண்டு வயது. ஆனால் எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் இதைப் பற்றி நண்பர்கள் பலரிடம் அப்பா நிறைய பேசியிருக்கிறார்.
"சிறு வயதில் வத்தலகுண்டுவில் இருந்தபோது அப்பா மிராசுதாரராக இருந்த தன் மாமனுடன்தான் அதிக நேரத்தைச் செலவிடுவாராம். அவரது மாமனுக்கு ஜல்லிக்கட்டு மேல் அதிக ஈடுபாடு உண்டு. அவருடைய மாட்டுவண்டியில் ஏறி அப்பா நிறைய இடங்களுக்குச் சென்று வந்துள்ளார்.
"ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்துக்குச் சென்று மாட்டு வண்டியின் மேல் நின்று நிறைய புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அந்த மாடுகள் வளர்க்கப்படும் ஊர்களுக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் நிறைய தகவல்களைச் சேகரித்து 'வாடிவாசல்' நாவலை எழுதினார்," என்று நினைவுகூர்கிறார் சி.சு.செல்லப்பாவின் மகன் சுப்ரமணியன்.
இதற்கு முன்பே பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை திரைப்படமாக்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தாலும், ஒரு பதிப்பகத்துடன் ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை. எனவே, தமிழ்ப் பதிப்பு, திரையுலகில் இது முக்கிய முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.
'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்புக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி உள்ளன. அநேகமாக செப்டம்பர் மாத மத்தியில் இப்படக்குழுவினரை தென் தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் பார்க்க முடியும். இந்நிலையில், 'வாடிவாசல்' படத்தின் தலைப்பு சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தில் தந்தை, மகன் என சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தாணு தயாரிக்கிறார். மேலும் பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
'வாடிவாசல்' படத்தின் சுவரொட்டியில் சூர்யா.