மனநலம் என்பது மிகவும் சாதாரணமான, அதே நேரத்தில் மிகவும் சிக்கலான ஒன்று என்கிறார் ஷ்ருதி ஹாசன்.
கல்லூரியில் தாம் உளவியல் தொடர்பான படிப்பை மேற்கொண்டதாகவும் கல்லூரியில் இருந்து வெளியேறிய பிறகும் உளவியல் குறித்து நிறைய படித்ததாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"எனது நண்பர்களில் மனநல ஆலோசகர்களும் உள்ளனர். சிறு வயது முதல் நான் மனநல ஆலோசனைகளைப் பெற்று வருகிறேன். இது அவசியம் எனக் கருதுகிறேன்.
"இவ்வாறு ஆலோசனை பெறுவதையும் அது குறித்து பொதுவெளியில் பேசுவதையும் சிலர் தவிர்க்கின்றனர்.
இதுபோன்ற தயக்கம் தேவையற்றது," என்கிறார் ஷ்ருதி.
இந்திய குடும்பங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இந்த தயக்கத்தை தாம் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தாங்கள் எந்தவகையான பிரச்சினையில் இருக்கிறோம் என்பது குறித்தே பலருக்கும் புரிவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
"குடும்ப உணர்வுகள் குறித்து எனக்கும் புரிகிறது. ஆனால், மனநலம் என்று வரும்போது எதுவும் நடக்காததுபோல தலையைத் தூக்கி, 'நான் நலமாக இருக்கிறேன்' என்று சொல்வது மோசமான நடத்தை.
"உதாரணமாக, நமக்கு வயிற்று வலி ஏற்பட்டால் முதல் நாள் தயிர் சோறு சாப்பிடுவோம்.
"காரமான உணவு வகைகளைத் தவிர்த்து விடுவோம். இரண்டாவது நாள், மருந்து சாப்பிடுவோம். மூன்றாவது நாளும் வலி தொடர்ந்தால் மருத்துவரிடம் சென்று உதவி கேட்போம்.
அந்தத் தருணத்தில் நம் வீட்டில் இருப்பவர்கள் 'நாங்கள் இருக்கும்போது எதற்கு மருத்துவர்?' என்று கேட்பார்கள். இதுதான் நம் குடும்பங்களில் உள்ள பிரச்சினை," என்று ஷ்ருதி ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் மனநல ஆலோசனைகளைப் பெறுவது சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
'கேஜிஎஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் 'சலார்' படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்துள்ள ஷ்ருதி ஹாசன், தமிழில் காலஞ்சென்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'லாபம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

