நடிகர் விஜய்யின் பெருந்தன்மையை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது என்று நடிகர் நாசரும் அவரது மனைவி கமீலாவும் நெகிழ்கின்றனர்.
இது தொடர்பாக கமீலா நாசர் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
நாசரின் மூத்த மகன் ஃபைசல். விபத்து ஒன்றில் சிக்கிப் படுகாயம் அடைந்த அவர் தமது கடந்தகால நினைவுகள் அனைத்தையும் இழந்துவிட்டார். எனினும், நடிகர் விஜய் தொடர்பான விஷயங்களை மட்டும் அவர் மறக்கவில்லை.
அதனால் விஜய் நடித்த படங்கள், பாடிய பாடல்கள் ஆகியவற்றை மட்டுமே பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். விபத்துக்குப் பிறகு ஃபைசலின் வாழ்க்கை இப்படித்தான் நகர்கிறது.
இதுகுறித்து கேள்விப்பட்ட விஜய் மிகவும் நெகிழ்ந்து, நாசரின் வீட்டுக்குச் சென்று அவருடைய மகனுடன் நேரம் செலவிட்டுள்ளார். மேலும், ஃபைசலின் பிறந்த நாளன்று விஜய் அவருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், காணொளியில் பேசியுள்ள கமீலா, விஜய்யை 'தம்பி' என்று குறிப்பிட்டுள்ளார்.
"தம்பி விஜய்யை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்," என்று தமது டுவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து நாசர் மகனுக்கு விஜய் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வெளிநாட்டு காருக்கு இறக்குமதி வரி செலுத்துவது தொடர்பில் உருவான சிக்கலால் விஜய் தரப்பு கடும் வருத்தத்தில் உள்ளது.
இந்நிலையில் விஜய் தரப்பில் உள்ள நியாயத்தை முன்வைக்கும் வகையில் 'பீஸ்ட்' படத்தில் ஏதேனும் சில காட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

