'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தமான பின்னர் பூஜா ஹெக்டேவின் மதிப்பு மளமளவென்று உச்சத்துக்கு சென்றுவிட்டது. இதையடுத்து தனது சம்பளத்தை அவர் கணிசமாக உயர்த்தி உள்ளதாகத் தகவல்.
தெலுங்கில் முன்பு இலியானா ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டபோது திரையுலகத்தினர் வாய் பிளந்தனர். "இவ்வளவு பெரிய தொகையா?" என்ற கேட்டாலும், அதைக் கொட்டிக்கொடுக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர்.
எனினும் அந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தவறினார் இலியானா. பாலிவுட்டில் கிடைத்த ஓரிரு வாய்ப்புகளை நம்பி அவர் தெலுங்குதேசத்தைக் கைவிட, ஒரு கட்டத்தில் பாலிவுட் இவரை மறந்துபோனது தனிக்கதை.
இலியானாவைப் பொறுத்தவரை புத்திசாலித்தனத்துடன் செயல்படுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தேடிவரும் எந்தவொரு நல்ல வாய்ப்பையும் அவர் இழப்பதாக இல்லை. கதை கேட்டு, அது பிடித்துப்போனால் உடனே கால்ஷீட் ஒதுக்குகிறார். அதேசமயம் சம்பள விஷயத்தில் கறார் காட்டுவது பூஜாவின் வழக்கம்.
இன்றைய தேதியில் தெலுங்கில் அதிக சம்பளம் வாங்குவது இவர்தான். முன்னணி நிறுவனங்கள், இயக்குநர்களின் படங்கள் என்றால் சுமார் நான்கு கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் பூஜா.
எனினும், படப்பிடிப்பின்போது பூஜா கொடுக்கும் ஒத்துழைப்பில் எந்தவித குறையும் காண முடியாது என்ற நல்ல பெயரை சம்பாதித்துள்ளார்.
சம்பளப் பட்டியலில் இவரை முந்திக்கொண்டு முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா. எனினும் அவர் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதனால் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள பூஜாவை தேடி வந்து ஒப்பந்தம் செய்கிறார்கள்.
"நான் முதன்முதலாக நடித்த படம் 'முகமூடி'. எனவே என்னை அறிமுகப்படுத்திய கோடம்பாக்கத்தை மறக்கவே இயலாது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் நல்ல வாய்ப்புகளை ஏற்க முடியவில்லை. அதன் பிறகு தெலுங்கில் சில வாய்ப்புகள் தேடி வந்தன. அதற்காக தமிழ் ரசிகர்களை மறந்துவிட்டேன் என்று சொல்வது சரியல்ல.
"தெலுங்கில் 'ஒக லைலா கோஸம்' மூலம் மீண்டும் நடிக்க வந்தபோது நானே எதிர்பாராத வகையில் 'முகுந்தா' பட வாய்ப்பு கிடைத்தது. அடுத்து, இந்தியில் 'மொஹஞ்சதாரோ' என நான் நடித்த படங்கள் வசூல் ரீதியில் வெற்றிபெற்றன. எனக்கான நல்ல நேரம் தொடங்கியதை உணர முடிந்தது," என்கிறார் பூஜா.
ராம் சரண், அக்ஷய் குமார், ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என இந்தியிலும் தெலுங்கிலும் பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்த பூஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் 'டூயட்' பாடுகிறார்.
தெலுங்கு ரசிகர்கள் இவர் ஒரு படத்தில் ஏற்று நடித்த 'புட்ட பொம்மா' என்ற கதாபாத்திரத்தை வைத்தே இவரைக் குறிப்பிடுகிறார்கள்.
"அந்த வகையில் நான் கொடுத்துவைத்த நடிகை எனலாம். ரசிகர்களின் பாசமும் ஆதரவும் இல்லை என்றால் முப்பது வயதை எட்டிவிட்ட ஒரு கதாநாயகியால் திரையுலகில் முன்னணி நாயகியாகத் தாக்குப்பிடிக்க முடியாது.
"எனக்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன," என்று சொல்லும் பூஜா, இப்போது அகில் அக்கினேனியுடன் 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்', பிரபாஸுடன் 'ராதே ஷ்யாம்', சிரஞ்சீவி, ராம்சரணுடன் 'ஆச்சார்யா', ரன்வீர் சிங்குடன் 'சர்க்கஸ்', சல்மான் கானுடன் 'பாய்ஜான்' என ஓய்வில்லாமல் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்திய ஊடகங்கள் பூஜாவை 'விமானத்தில் வாழ்பவர்' என்றுதான் குறிப்பிடுகின்றன. அவரும் இதை ஒப்புக்கொள்கிறார்.
மும்பைப் பெண்ணான இவர், அனைத்து மொழிகளிலும் நடிப்பதால் சம்பளத்தைப் போலவே ரசிகர் கூட்டமும் அதிகரித்து வருகிறது. ரசிகர்களுக்காகவே சமூக வலைத்தளங்களில் வாரந்தோறும் ஏதாவது தகவல்கள், புகைப்படங்களைப் பதிவிடுவது இவரது வழக்கம்.
"உண்மையாகவே அங்கும் இங்குமாக விமானத்தில் பறந்தபடி இருக்கிறேன். பல விஷயங்களைச் செய்ய முடியவில்லை. முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதும் உண்மை. ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாட மட்டும் தவறுவதே இல்லை," என்கிறார் பூஜா.

