எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியாகி, அஜித் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது 'வலிமை' பட சுவரொட்டிகள்.
ஜூலை 12ஆம் தேதி காலையில் அறிவிக்கப்பட்டு மாலையில் வெளியான முதல் தோற்ற சுவரொட்டியை லட்சக்கணக்கானோர் உடனுக்குடன் பார்த்து ரசித்தனர்.
ஐந்தே நிமிடங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படச் சுவரொட்டி என்ற சாதனையில் தொடங்கி, அதிகமானோர் விரும்பிய, பகிர்ந்த சுவரொட்டி என்ற சாதனையையும் சத்தமின்றிச் செய்திருக்கிறது 'வலிமை'.
இத்துடன் நிற்காமல் இப்படத்தில் யாரெல்லாம் நடித்துள்ளனர், படப்பிடிப்பு முடிந்துவிட்டதா, எப்போது படம் வெளியாகும் என்பதற்கெல்லாம் உரிய விவரங்கள் கிடைத்துள்ளன. இது ரசிகர்களுக்கு மற்றொரு வகையில் ஆச்சரியத்தை ஏற்படுத்த உள்ளது.
கடந்த 2019, ஆகஸ்ட் 29ஆம் தேதி 'வலிமை' படத்துக்கு பூசை போடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. பிறகு அக்டோபர் 18ஆம் தேதிக்கு பூசை தள்ளி வைக்கப்பட்டது. எனினும் அன்றைய தினம் வேறு தடைகள் இல்லாமல் பூசை நடந்து படப்பிடிப்பும் துவங்கியது.
யுவன் ஷங்கர் ராஜா இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு, கலை இயக்குநர் தோட்டா தரணி என முன்னணி கலைஞர்களுடன் கூட்டணி அமைத்து களமிறங்கினார் இயக்குநர் எச்.வினோத்.
வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, அஜய் தேவ்கன், அரவிந்த் சுவாமி எனப் பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, கடைசியில் தெலுங்கு 'ஆர்.எக்ஸ் 100' படப் புகழ் கார்த்திகேயா ஒப்பந்தமானார்.
கிட்டத்தட்ட 700 நாள்கள் இப்படம் குறித்த மேலதிக தகவல்களுக்காக அஜித் ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். அதனால் அவ்வப்போது பொறுமை இழந்து சமூக வலைத்தளங்களில் சிலவற்றைப் பதிவிட்டனர் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
மேலும், 'வலிமை' பட வேலைகள் தொடங்கியது முதல் எல்லாமே எதிர்பாராத வகையில் நிகழ்வதாகவும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
"முதலில் பூசை நடக்கும் தேதியும் நேரமும் மாற்றப்பட்டது. அடுத்து, 2019 டிசம்பர் 13ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஹைதராபாத்தில் காட்சிகளைப் படமாக்குவோம் என்று கூறிவிட்டார் அஜித்.
இரண்டு அதிரடி சண்டைக் காட்சிகளை முதலில் படமாக்கினர். வழக்கமாக நகைச்சுவைக் காட்சிகள் முதலில் படமாக்கப்படும். ஆனால் அஜித் இதிலும் வித்தியாசம் காட்டியுள்ளார். அடுத்தக்கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டபோதுதான் இருசக்கர வாகன விபத்தில் சிக்கினார். இதனாலும், பிறகு கொரோனாவாலும் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
"வெளிநாடுகளில் எடுக்கப்பட வேண்டிய சண்டை, கார்-மோட்டா் பந்தயங்களை உள்ளடக்கிய காட்சிகளை எப்படி எடுப்பது என இயக்குநர் வினோத்தும் கவலையில் மூழ்கினார். அஜித்தோ வழக்கம்போல் கவலைப்படாமல் யோசித்து, மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம் என்றாராம். அவர் அளித்த ஊக்கத்தை அடுத்து சுவிட்சர்லாந்து, சுவீடன், மொராக்கோவில் எடுக்க வேண்டிய காட்சிகளை இந்தியாவிலேயே படமாக்கி உள்ளனர்.