திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
07f288e9-d0aa-4756-891b-6961f3e859c5
-
multi-img1 of 3

'நெற்றிக்கண்': விக்னேஷ் அறிவிப்பு

நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'நெற்றிக்கண்' படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. இத்தகவலை விக்னேஷ் சிவன் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'அவள்' படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'நெற்றிக்கண்'. திகில் கதையைக் கையாண்டுள்ளனர். வில்லனாக அஜ்மல் நடித்துள்ளார்.

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், 'நெற்றிக்கண்' நேரடியாக வெளியீடு காண்கிறது. ஏற்கெனவே நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படமும் நேரடியாக இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் அவரது ரசிகர்கள் பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். எனினும் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மீண்டும் நடிக்க வருகிறார் ஷாலினி

திருமணத்துக்குப் பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை ஷாலினி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு அஜித், ஷாலினி திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து பின்னர் கைபிடித்தனர். இதையடுத்து திரையுலகை விட்டு விலகினார் ஷாலினி. இத்தம்பதியர்க்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஷாலினி நடிக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்காக சிறப்பு கதாபாத்திரத்தை மணிரத்னம் ஒதுக்கி இருப்பதாகவும் அதை ஏற்று நடிக்க ஷாலினி ஆர்வமாக இருப்பதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

'இன்னும் கூட கேலி செய்கிறார்கள்'

கடும் உடற்பயிற்சிகள் மூலம் 20 கிலோ எடை குறைந்துள்ளார் நடிகை வித்யுலேகா.

இருப்பினும் தம்மை உருவ கேலி செய்பவர்கள் இன்னும் ஓயவில்லை என சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இதுவரை 20 கிலோ குறைத்திருக்கிறேன். ஆனால் இன்னமும் எனது உடல் எடையை வைத்து பலரும் உருவ கேலி செய்து வருகின்றனர். என்னைப் பன்றி என்றும் நான் நடனம் ஆடும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றும் பேசுகின்றனர். எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் விஷயம் தெரியுமா? நான் என்னைத் தவிர இங்கு வேறு யாரையும் திருப்திப்படுத்துவதற்காக இல்லை. எனவே நன்றி," என்று வித்யுலேகா இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.