நடிகர் அரவிந்த்சாமி இயக்குநராக மாறியுள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நவரசா' என்ற 'ஆந்தாலஜி' வகை திரைப்படத்தில் இவரும் ஒரு பகுதியை இயக்கி உள்ளார்.
'ரௌத்திரம்' என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள அந்தப் பகுதியில் 'பிக்பாஸ்', 'கபாலி' மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரித்விகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அரவிந்த்சாமி இயக்கத்தில் நடித்தோம் என்பது ஏதோ கற்பனை போல் உள்ளதாக அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் ரித்விகா.
தாம் அவரது தீவிர ரசிகை என்றும் 'ரௌத்திரம்' மூலம் தாம் நிறைய கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"அரவிந்த்சாமிக்குள் ஓர் இயக்குநர் ஒளிந்து கொண்டிருந்தார் என்பது எல்லோருமே யூகித்த விஷயம்தான்.
"எனினும் இந்த அளவு நேர்த்தியாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கவில்லை," என்கிறார் ரித்விகா.
அதாவது, படத்தில் நடிப்பவர்களின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனிப்பது, தமது எதிர்பார்ப்பு என்ன என்பதை தெளிவாகச் சொல்வது, சுறுசுறுப்பாக இயங்குவது என அசர வைத்தாராம் அரவிந்த்சாமி.
"1990களில் குழந்தைகளாக இருந்த அனைவருக்குமே அவரைப் பிடிக்கும். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அவரைத் திரையில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
"அப்படிப்பட்டவரிடம் இருந்து திடீரென்று ஒருநாள் தொலைபேசி அழைப்பு வந்தால் எப்படி இருக்கும்?
"நிச்சயம் படபடப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். எனக்கும் அப்படித்தான் இருந்தது.
"அவர் கதையை விவரித்தபோது எனது நினைவுகள் எல்லாம் அவர் நடித்த 'ரோஜா', 'பாம்பே' படங்களைச் சுற்றி வந்தது.
"எனது கதாபாத்திரம் எப்படி இருக்கவேண்டும் என்பதை அழகாக விவரித்தார்," என்கிறார் ரித்விகா.
படத்தில் பங்கேற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரிடமும் காணொளி வசதி மூலம்தான் கலந்துரையாடினாராம் அரவிந்த்சாமி. கதை, காட்சிகள், வசனங்கள் ஆகிய அனைத்தையும் இணையம் மூலமாகவே பகிர்ந்துள்ளார்.
"எனக்கான வசனங்களைக் கூட முன்கூட்டியே அனுப்பிவிட்டார். அதேசமயம் சில நிபந்தனைகளையும் விதித்தார்.
"வசனங்களை மனப்பாடம் செய்து பேசக்கூடாது என்பதுதான் மற்ற அனைத்தையும்விட முக்கியமானது.
"கதாபாத்திரத்தைப் பற்றி முன்கூட்டியே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடக் கூடாது என்பது அவரது அறிவுரை. படப்பிடிப்பின்போது அவரே வசனங்கள், முக பாவங்கள், உடல்மொழி ஆகியவற்றை விவரித்தார்.
"நம்மையே நேரடியாக வசனங்களைப் பேச வைப்பார். அப்போது மற்றவர்கள் பேசக்கூடிய வசனங்களைத் தாமே படிப்பார். இப்படி ஒவ்வொரு காட்சிக்கும் வசனத்துக்கும் அவர் மெனக்கெட்டதைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.
"பெரிய நடிகர், ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர் என்றபோதிலும் இப்போதும் கூட அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்," என்று இன்னும் ஆச்சரியம் விலகாமல் பேசுகிறார் ரித்விகா.
'ரௌத்திரம்' பகுதிக்கான படக்குழுவினருக்காக சிறப்புப் பட்டறை ஒன்றையும் ஏற்பாடு செய்திருக்கிறார் அரவிந்த்சாமி. அதில் பங்கேற்ற வகையில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார் ரித்விகா.
"படப்பிடிப்பு இடைவேளையின்போது அரவிந்த்சாமியும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் சினிமா குறித்து மட்டுமே பேசுவார்கள். அதைப் பலமுறை பார்த்துள்ளேன். தேவையற்ற விஷயங்கள் எதுவுமே அவர்களுடைய உரையாடலில் இடம்பெறாது.
"ஒரு காட்சியில் நாம் நன்றாக நடித்தால் உடனடியாகப் பாராட்டுவார். ஒருவேளை சரியாக நடிக்கவில்லையோ என்று நாம் நினைப்பதை யூகித்துவிட்டால், அருமையாக இருந்தது என்று சொல்லி தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வார்.
"நான் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறேன். எனக்கான போலிஸ் உடை எனது உடல் அளவுக்கு ஏற்ப சரியாக இருக்கிறதா, அதை அணிந்துகொண்டு நடிப்பதற்கு வசதியாக உள்ளதா? என்று கேட்டு உறுதி செய்தார்.
"ஓர் இயக்குநருக்கு இதுபோன்ற விஷயங்கள், அணுகுமுறைகள் தெரிந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்," என்று சொல்லும் ரித்விகா, மீண்டும் அரவிந்த்சாமி இயக்கத்தில் நடிக்க விரும்புகிறாராம்.
தற்போது தமிழில் இரண்டு, தெலுங்கில் ஒன்று என மூன்று படங்களில் நடித்து வருபவர், இணையத் தொடர் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்.
'நவரசா' வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார் ரித்விகா.
, :
ரித்விகா

