வழக்கம்போல் நிறைய சுவாரசியங்களுடனும் நகைச்சுவையாகவும் உருவாகி உள்ளது 'அரண்மனை 3'.
இந்த மூன்றாம் பாகத்தில் ஆர்யாவும் ராஷி கண்ணாவும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.
வழக்கம்போல் இதிலும் நகைச்சுவை கலைஞர்களை மொத்தமாகக் களமிறக்கி உள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
பேய்கள் சம்பந்தப்பட்ட கதை என்றாலே பாழடைந்த பங்களா, கைவிடப்பட்ட பழைய கட்டடம் என்று காட்டுவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லும் சுந்தர்.சி, 'அரண்மனை' முதல் பாகத்தை உருவாக்கியபோதே, இந்த நடைமுறையை உடைக்க வேண்டும் என்று முடிவு செய்தாராம்.
அப்போதுதான் கலகலப்பாக இருக்கும் வீடு, நிறைய கதாபாத்திரங்கள், அதிக நகைச்சுவை என்று புதிய திட்டம் மனதில் உருவானது என்கிறார்.
"ஆனால் அரண்மனை போன்ற வீட்டை தேடிக்கண்டுபிடிக்கத்தான் அதிகம் சிரமப்பட்டோம். பிறகு எப்படியோ குஜராத்தில் உள்ள அரண்மனை கிடைத்தது.
"எல்லாமே சரியாக அமைந்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான படத்தை மூன்று பாகங்களாக ரசிகர்களுக்குத் தர முடிகிறது.
'அரண்மனை' பட வரிசைக்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள அங்கீகாரத்தைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சளைக்காமல் உழைத்திருப்பதாகச் சொல்பவர், புதிய பாகத்திலும் கதாநாயகிக்கும் மற்ற பெண் கதாபாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்.
"எனது படங்களில் எப்போதுமே நாயகிகளை முன்னிலைப்படுத்துவேன். இம்முறை நாயகனாக ஆர்யா நடித்துள்ளார். எனவே அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கும்.
"நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நீண்ட நாள்களாகத் திட்டமிட்டு வந்தோம். அதற்கான வாய்ப்பும் சூழ்நிலையும் இப்போதுதான் அமைந்தது.
"கொழுகொழு என்று வருவார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, முறுக்கேறிய உடற்கட்டுடன் வந்து நிற்கிறார்.
"ஆர்யாவைப் பொறுத்தவரை இயக்குநரை நம்பி தம்மை முழுமையாக ஒப்படைத்து விடுவார். இயக்குநருக்கு உள்ள சிரமங்களையும் பொறுப்புகளையும் நன்கு உணர்ந்தவர்.
"ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, விவேக் என நிறைய பேர் படத்தில் இருக்கிறார்கள்.
"இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நானும் விவேக்கும் ரொம்ப நெருக்கமாகிவிட்டோம். தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் இருவரும் ஒற்றையடிப் பாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்வோம். அப்போது பேசிய விஷயங்கள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.
"சிரிப்பு, பயம், திகில், காதல், நடனம், இனிமையான இசை எனப் பல்வேறு அம்சங்கள் நிறைந்த, தரமான படமாக 'அரண்மனை 3' உருவாகி உள்ளது. இது குழந்தைகளையும் கவரும். ஒவ்வொரு காட்சியையும் திரையில் காணும் போது மனதில் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது," என்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
'அரண்மனை 3' மிக விரைவில் வெளியீடு காண உள்ளது.