'அருவி' என்ற வெற்றிப் படத்தை தந்த இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கிஉள்ள படம் 'வாழ்'.
அண்மையில் இதை நேரடியாக இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் என்ற கூடுதல் அம்சமும் உள்ளது.
ஒரு படம் வெற்றி அடைந்தால், அடுத்தடுத்து புதுப்படங்களை இயக்குவதில்தான் பெரும்பாலான இயக்குநர்கள் முனைப்பு காட்டுவார்கள். பெரிய நடிகர்களை அணுகி கதை சொல்ல முயற்சி செய்வார்கள். ஆனால் அருண் பிரபு புருஷோத்தமன் இதற்கு நேர்மாறாக உள்ளார்.
'வாழ்' கதையை கடந்த 2010ஆம் ஆண்டிலேயே எழுதி விட்டாராம். ஆனால் அதை திரைப்படமாக உருவாக்க தமக்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டதாகச் சொல்கிறார். ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று கேட்டால், சரியான காலம், நேரத்துக்காகக் காத்திருந்ததாகப் பதில் வருகிறது.
"இந்தப் படத்தின் மூலம் சமூகத்துக்கு என்ன சொல்லப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். 'வாழ்' என்பது படத்தின் தலைப்பு மட்டுமல்ல, நான் சொல்ல வரும் விஷயமும் அதுதான். அதாவது உலகில் பிறந்த அனைவருமே வாழ வேண்டும். ஆனால் எப்படி வாழ்கிறோம் என்பது முக்கியம்.
"தன்னுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என பலரும் கற்பனை செய்து வைத்திருப்பார்கள். இப்படி வாழ வேண்டும், அவரைப் போல் பிரபலமாக வேண்டும் என்று பலர் மெனக்கெடுகிறார்கள். ஆனால் நமக்கு கிடைத்த ஒரு வாழ்க்கையை வாழ்வதில் ஏன் இவ்வளவு யோசனைகள், திட்டமிடல்கள் தேவைப்படுகின்றன?
"இந்தக் கேள்வியை 'வாழ்' படம் எழுப்பும். அதே சமயம் எனது முந்தைய படமான 'அருவி'யைப் போல் இது கனமான கதையம்சம் கொண்ட படைப்பு அல்ல. எனினும் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அதில் இடம்பெற்றுள்ள ஏதேனும் ஒரு கதாபாத்திரத்துடனாவது தம்மைப் பொருத்திக்கொள்ள முடியும்," என்கிறார் அருண் பிரபு.
'வாழ்' கதையை முதன்முதலில் நடிகர் சிவகார்த்திகேயனிடம்தான் சொன்னாராம். அவர் அளித்த ஊக்கமும் இப்படம் உருவாக முக்கிய காரணம் என்கிறார்.
"கடந்த 2011ஆம் ஆண்டிலேயே சிவா அண்ணாவிடம் கதையை விவரித்து இருந்தேன். நிறைய புதுமுகங்களை வைத்து இந்தக் கதையை தயாரிக்க வேண்டும் என்றால் எந்தவொரு தயாரிப்பாளரும் நிச்சயம் அதிகம் யோசித்து தயங்குவார். ஆனால் சிவா அண்ணன் அதையெல்லாம் செய்யவில்லை. நாம் இணைந்து பணியாற்றுவோம் என்றார். அவர் அப்படிச் சொன்னதுமே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது.
"மேலும், 'நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதைச் செய்யுங்கள். நான் கடைசியாகப் பார்க்கிறேன். நீங்கள் இப்போது எதுவுமே சொல்ல வேண்டாம்' என்று முழு சுதந்திரம் கொடுத்தார். ஒரு கட்டத்தில் நான்தான் மிகவும் தயங்கினேன். ஆனால் அவரோ, எல்லாமே கச்சிதமாக உள்ளது என்று சொல்லி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்," என்கிறார் அருண் பிரபு.

