ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தில் தோன்றுகிறார் வைபவ். அந்த வகையில் அவரது நடிப்பில் உருவாகிறது 'பஃபூன்'.
அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்குகிறார். கார்த்திச் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டியைப் பார்க்கும் அனைவருமே இது முன்பு தமிழகத்தில் பிரபலமாக இருந்த நாடக பாணி கதையா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அசோக் வீரப்பன் அளிக்கும் பதில், "இது நாடக கலைஞர்களைப் பற்றிய படம். எனினும் படம் முழுவதும் நகைச்சுவைச் காட்சிகள் நிறைந்திருக்கும்," என்பதுதான்.
"முக்கியமான விஷயங்களையும் படத்தில் அலசி உள்ளோம். ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை நிலப்பரப்பு சார்ந்த கதை இது.
"சிறு வயது முதலே எனக்கு நாடகங்கள் பார்க்கப் பிடிக்கும். ஓராண்டில் சுமார் இருநூறு நாள்கள் நாடகங்கள் அரங்கேறும் என்றால் அவற்றைப் பார்க்கும் வரை எனக்குத் தூக்கம் வராது.
"நான் சிறுவனாக இருந்த சமயத்தில் பொதுவாக நாடகங்கள் இரவு பத்து மணிக்கு மேல்தான் தொடங்கும். பிறகு விடிய விடிய நீடித்து, சில சமயங்களில் காலை ஆறு மணி வரை நாடகங்கள் நீண்டுள்ளன.
"அந்தக் கலைஞர்கள் தங்கள் கண்ணெதிரே ரசிகர்கள் இல்லையென்றாலும் விடாமல் நடித்து முடிப்பார்கள். அவர்களின் அந்த உழைப்பையும் கலை தொடர்பான அர்ப்பணிப்பையும் கண்டு வெகுவாக வியந்திருக்கிறேன். அரிதாரம் பூசி மேடையேறும் போது ஒரு மாதிரி காட்சி அளிப்பவர்கள், நாடகம் முடிந்ததும் அடையாளமே தெரியாத வகையில் மாறிப் போவார்கள். மேடையை விட்டு இறங்கிய பின்னர் அரிதாரத்தைக் கலைத்ததும் அந்தக் கலைஞர்களின் வாழ்க்கை வேறு விதமாக இருக்கும். அந்த வாழ்க்கையைப் பதிவு செய்யும் முயற்சிதான் 'பஃபூன்'," என்று விளக்கம் அளிக்கும் அசோக் வீரப்பன், இந்தக் கதைக்கு வைபவ் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளதாகச் சொல்கிறார்.
அவரிடம் இந்தப் படத்தின் கதையை முதல் முறை விவரித்தபோது, இதுவரை தாம் கிராமத்துப் பின்னணி கொண்ட கதையில் நடித்ததில்லை என்றார். அதேசமயம் கதை மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறினார்.
"அதன் பிறகு இருவருமே அதிகம் யோசிக்கவில்லை. படப்பிடிப்பு எப்போது என்று வைபவ் கேட்க, நானும் அதற்குத் தயார் என்று சொல்ல, பணிகள் தொடங்கின. அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் கொஞ்சம் கனமானது. அதேசமயம் நகைச்சுவையும் தேவை. வைபவ் நிச்சயம் இதில் சாதிப்பார் என்று மனதார நம்பினேன். எனது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.
"அவரும் நாடகங்களை அரங்கேற்றிய குடும்பத்தில் இருந்து வந்தவர். சில நாடகங்களில் இடம்பெறும் கோமாளி கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாகக் கவரும். அந்த வேடத்தில் நடிப்பவர் எல்லோரிடமும் பாராட்டுகளைப் பெறுவர். வைபவ் அப்படிப்பட்ட ஒரு கதாநாயகன். உணர்வுபூர்வமாக நடித்தபடியே நகைச்சுவையிலும் அசத்துவார். இந்தக் கூற்றை எனது படத்திலும் அவர் நிரூபித்துள்ளார்," என்று பாராட்டுகிறார் இயக்குநர் அசோக் வீரப்பன்.
'நட்பே துணை' மூலம் இளையர்களைக் கவர்ந்த அனாகா தான் இப்படத்தின் கதாநாயகி. மேலும் 'ஆடுகளம்' ஜெயபாலன், நரேன் ஆகியோரும் உள்ளனர். எம்.பி.விஸ்வநாதன் என்ற நாடகக் கலைஞர் வைபவுக்கு தந்தையாக நடித்துள்ளார்.
"நடிகர் சங்கத்தில் ஏராளமான நாடகக் கலைஞர்களின் விவரங்களை பாதுகாத்து வைத்துள்ளனர். அவர்கள் அனைவருமே தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் விதமாக சிறு காணொளிப் பதிவை சங்கத்திடம் அளித்துள்ளனர். அப்படியொரு காணொளிப் பதிவைப் பார்த்துத்தான் விஸ்வநாதன் சாரை தேர்வு செய்தேன்.
"பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் சினிமா வாய்ப்பு அமையவில்லை. கடைசி காலத்திலும் இந்த ஆசை நிறைவேறாமல் இறந்துபோவோம் என்று நினைத்தாராம். ஆனால் என் மூலம் தனது கனவு நிறைவேறுவது தாம் எதிர்பாராத ஒன்று என நெகிழ்ந்தார். அற்புதமான நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார்," என்று சொல்லும்போது அசோக்கின் குரலும் நெகிழ்கிறது.
கார்த்திக் சுப்புராஜ்தான் 'பஃபூன்' படத்தை தயாரிக்கிறார்.