'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பையும் சூடான விவாதங்களையும் எழுப்பி உள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் படம் இது. அவரது நாற்பதாவது படம் என்ப தால் திரைக்கதையில் தீவிர கவனம் செலுத்தியுள்ளார் பாண்டிராஜ்.
இது தமிழகத்தின் பொள்ளாச்சி பகுதியில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் என்று கசிந்த தகவல்தான் சில தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம்.
"பொள்ளாச்சி என்றதுமே அங்கு பல இளம்பெண்கள் சீரழிக்கப்பட்ட விவகாரம்தான் நினைவுக்கு வரும். அது தொடர்பாக வெளிவந்த ஒலி, ஒளிப்பதிவுகளைக் கேட்டவர்களையும் பார்த்தவர்களையும் பதறவும் கோபப்படவும் வைத்தன.
"அந்த விவகாரத்துடன் வேறு சில விஷயங்களையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளார் பாண்டிராஜ் எனத் தகவல்.
"உண்மை எப்போதும் வெளியே வந்த செய்திகளைவிட பயங்கரமானதாக இருக்கும் என்பார்கள். அதுபோலவே 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் பொள்ளாச்சி சம்பவத்தைக் கையாண்டுள்ளார் பாண்டிராஜ். அவர் எவ்வாறு கதை சொல்வார் என்பது தெரிந்த விஷயம்.
"கடைக்கோடி சாமானியனுக்கும் தமது படங்களும் அவற்றில் சொல்லப்படும் கருத்துகளும் சென்றடைய வேண்டும் என விரும்புவார்.
"தனக்கே உரிய முறையில் எளிமையாகவும், அதே சமயம் அதிரடியாகவும் பொள்ளாச்சி சம்பவத்தை விவரிக்கப் போகிறார் பாண்டிராஜ் என்றதும் ஒரு தரப்பினர் அதற்கு எதிராகக் களமிறங்க தயாராகிறார்கள்," என்கின்றனர் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
இதற்கேற்ப 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பும் அதிரடியாக உள்ளது. அதில் உயரமான வாளை தூக்கிக்கொண்டு மிகுந்த கோபத்தோடு காட்சி அளிக்கிறார் சூர்யா. அவரது இந்த தோற்றம் இளையர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தனிமையான பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் ஏராளமான இளைஞர்கள் தலை குப்புறக் கிடக்க, அவர்களில் ஒருவனுடைய காலைப் பற்றி இழுத்துக்கொண்டு வரும் சூர்யா கடும் கோபத்தில் இருக்கிறார். அதற்கு அவர் கேள்விப்பட்ட பாலியல் கொடுமைதான் காரணம் என ரசிகர்கள் யூகிக்கின்றனர்.
"'சூரரைப் போற்று' வெற்றியை அடுத்து மற்றொரு வெற்றிக்குத் தயாராகி வருகிறார் சூர்யா. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தி அடைந்தது மிகப்பெரிய உயரம்.
"அதே போல சூர்யாவுக்கு ஒரு வெற்றிப் படத்தை அளிப்பார் பாண்டிராஜ். அதற்கு அண்மையில் வெளியான முன்னோட்டக் காட்சித் தொகுப்புதான் சாட்சி," என்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.
'எதற்கும் துணிந்தவன்' என்ற தலைப்பில் ஏற்கெனவே கடந்த 1976ஆம் ஆண்டு தமிழில் ஒரு படம் வெளியாகி உள்ளது. அதில் சூர்யாவின் தந்தை சிவகுமார்தான் நாயகன். இப்போது அதே தலைப்பில் சூர்யா நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.