தனது திருமண வாழ்க்கையில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.
இவரது கணவரான தொழிலதிபர் முஸ்தபா ராஜு அமெரிக்காவில் உள்ளார். கொரோனா நெருக்கடி காரணமாக இருவரும் அதிகம் சந்தித்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், தொலைபேசி வழி தினமும் பேசிக்கொள்வதாக பிரியாமணி தெரிவித்துள்ளார்.
முஸ்தபா ராஜு ஏற்கெனவே திருமணமானவர். அவரது முதல் மனைவி ஆயிஷா, முஸ்தபாவுக்கும் பிரியாவுக்கும் நடந்த திருமணம் செல்லாது என இப்போது புகார் எழுப்பியுள்ளார்.
"என்னை முஸ்தபா இன்னும் சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. நாங்கள் பிரிந்து இருந்தாலும் இன்னும் அவர் எனது கணவர்தான். அவரது இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது," என்கிறார் ஆயிஷா.
அவரது இந்த அதிரடி அறிவிப்பால் பிரியாமணி கடும் கோபம் அடைந்துள்ளதாகவும் அவரது மண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியானது. சமூக வலைத்தளங்களிலும் பலர் இதுகுறித்து பதிவிட்டனர். இந்நிலையில் இதுகுறித்து பிரியாமணி விளக்கம் அளித்துள்ளார்.
தாமும் கணவர் முஸ்தபாவும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு இணக்கமாக வாழ்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.்
"முஸ்தபா தற்போது அமெரிக்காவில் வேலை செய்துகொண்டு இருக்கிறார். ஆனாலும் ஒருவருக்கொருவர் தினமும் பேசிக்கொள்கிறோம். அவர் வேலையில் பரபரப்பாக இருந்தால் கைபேசியில் குறுந்தகவல் அனுப்பி நலம் விசாரிப்பார். வேலை முடிந்ததும் என்னை அழைப்பார். அதுபோல் நான் படப்பிடிப்பில் பேச முடியாத நிலையில் இருந்தாலும் குறுஞ்செய்தி அனுப்பி நலம் விசாரிப்பேன்," என்கிறார் பிரியாமணி.