'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் கால்பதித்தவர் ஷிரின் காஞ்ச்வாலா. அதன் பிறகு வேறு எந்தப் படத்திலும் காணவில்லை.
இடையில் தெலுங்குப் படங்களில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கிறார் ஷிரின். அவர் நடிப்பில் உருவாகி உள்ள 'டிக்கிலோனா', 'மஞ்சள் குடை' ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியீடு காணத் தயாராக உள்ளன.
"நான் சினிமாவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. வாய்ப்புகளைத் தேடிச் செல்வது எனக்குப் பிடிக்காது. நல்ல கதைகள் தேடி வரும்போது ஏற்றுக் கொள்கிறேன்.
"கொரோனா ஊரடங்கின்போது ஏராளமான தமிழ்ப் படங்கள் பார்த்துவிட்டேன். தமிழ்ப் படங்களில் கதை நகரும் விதம், குடும்ப உணர்வுகள், சண்டைக்காட்சி, இறுதிக்காட்சிகள் எல்லாம் படத்துக்குப் படம் நன்கு மாறுபடும். ஒவ்வோர் அம்சத்தையும் வித்தியாசமாக வெளிப்படுத்துகிறார்கள்," என்று சொல்லும் ஷிரின், வட இந்தியாவைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழகம் தமது இரண்டாவது தாய் வீடு என்கிறார்.
சென்னையைப் போன்ற அழகான நகரத்தை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்றும் தொடர்ந்து சென்னையிலேயே தங்கி இருப்பதுதான் தமது ஆசை என்றும் சொல்கிறார்.
"இப்போது மும்பையில் உள்ளேன். மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும், எப்போது சென்னைக்குச் செல்வோம் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்த படியே உள்ளது. மிக விரைவில் கொரோனா சிக்கல் முடிவுக்கு வரும் என்றும் பழையபடி முழு சுதந்திரமாக சென்னைக்கு வந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வேன் என்றும் நம்பிக்கை உள்ளது," என்கிறார் ஷிரின்.
தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம்.
"தமிழில் வெளிவந்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா', 'வால்டர்' ஆகிய படங்களை நண்பர்கள் நிறைய பேர் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள். தென்னிந்தியப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால்தான் அவை இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. அவ்வாறு வெளிவரும் ஒரு படத்தையும் விட்டுவைக்க மாட்டோம்.
"ஆனால், தமிழ்ப் படங்களில் குறிப்பிட்டவை மட்டுமே மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. தமிழ்ப் படங்கள் அனைத்தும் இந்தியில் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்," என்று சொல்லும் ஷிரின், அடிப்படையில் விமானப் பணிப்பெண். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, இந்தியாவில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார்.
மூன்று ஆண்டுகள் அந்தப் பணியில் நீடித்தவர், பிறகு சினிமா மீதான ஆர்வத்தால் அந்தப் பணியில் இருந்து விலகிவிட்டார்.
"விமானப் பணிப்பெண்ணாக இருந்த மூன்று ஆண்டுகளும் தரையில் வேலையே இல்லை. வானில் பறந்துகொண்டே இருந்தேன். அந்தப் பணி பிடித்திருந்தாலும் சினிமா ஆசைதான் வெற்றிபெற்றது.
"சிறு வயதில் இருந்தே சினிமா என்றால் உயிர். அந்த ஆர்வத்தில்தான் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். கன்னடத்தில் நடித்த 'விராஜ்' தான் எனது முதல் படம். அது வெளியான கையோடு கோடம்பாக்கம் என்னை அரவணைத்தது.
"இப்போது, வேறு எந்த மொழியிலும் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு அடுத்தடுத்து தமிழில் படங்கள் அமைகின்றன," என்கிறார் ஷிரின்.