திரையுலகைப் பொறுத்தவரை பல தருணங்களில் கலைஞர்கள் எடுக்கும் சில முக்கிய முடிவுகள்தான் அவர்களுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
அந்த வகையில் மூன்று கதாநாயகிகள் அண்மையில் எடுத்துள்ள முக்கிய முடிவுகள் என்னவென்று பார்ப்போம்.
மழை சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிப்பது என்றால் இளம் நாயகி நிதி அகர்வாலுக்கு அறவே பிடிக்காதாம். அதிலும் பாடல் காட்சிகள் மழையில் படமாக்கப்பட்டால் வாழ்க்கையே வெறுத்துப் போனதுபோல் உணர்வாராம்.
படப்பிடிப்பின்போது இயக்குநர் தரப்பில் எப்படியாவது பலவிதமாகப் பேசி அத்தகைய காட்சியில் தம்மை நடிக்க வைத்துவிடுவதாகப் புலம்புகிறார் நிதி அகர்வால்.
"மழையில் எடுக்கப்படும் காட்சிகளில் நடிப்பது எளிதான விஷயம் அல்ல. முதலில் மழை நீரில் முழுவதுமாக நனைந்துவிடுவோம். ஆனால் அதன் பின்னர் நாம் அணிந்துள்ள ஆடைகளை உலர வைத்து, மீண்டும் நனைவது போன்று காட்சியைப் படமாக்குவார்கள்.
"இதற்கு ஒத்துழைப்பது மிகவும் கடினமான வேலை. மேலும், தண்ணீர் பொழியும்போது நம் கண்களைத் திறந்து கொண்டு நடிப்பது சவாலான ஒன்று. அதனால்தான் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது ஒருவித சலிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் காட்சி அமைப்பை மாற்ற இயலாது என்று இயக்குநர் கூறிவிட்டால் வேறு வழியின்றி நடித்துதான் ஆக வேண்டும்," என்கிறார் நிதி அகர்வால்.
தமிழில் 'பூமி, ஈஸ்வரன்' ஆகிய படங்களில் நடித்த நிதி அகர்வால் இப்போது தமிழிலும் தெலுங்கிலுமாக மூன்று படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
*** இனி எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளார் தமன்னா. வில்லி வேடங்களில் நடிப்பது தமக்கு ஒத்துவராது என்கிறார். தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் இவருக்கு வரவேற்பு உள்ளது. 'சீட்டி மார்', 'மேஸ்ட்ரோ', 'எஃப்-3' உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர், இணையத் தொடர்களிலும் கவனம் செலுத்துகிறார்.
இந்நிலையில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடக் கேட்டு பலரும் இவரை அணுகிறார்கள். வருண்தேஜ் நடிக்கும் கனி என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் நாயகிக்கு உள்ள சந்தை மதிப்பு குறைந்துவிடாதா? என்று கேட்டால், அதற்கு வாய்ப்பு இல்லை என்பதே தமன்னாவின் பதிலாக உள்ளது.
"இதற்கு முன்பு தெலுங்கு, கன்னடப் படங்கள் சிலவற்றில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளேன். அதன் பிறகும் கூட பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறேன். ரசிகர்களுக்கு என் நடனம் பிடித்திருப்பதால்தான் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட அழைக்கிறார்கள்.
"அதேசமயம் வில்லியாகவும் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடிப்பதை மட்டும் தவிர்க்கிறேன். அதுபோன்ற வேடங்களில் எனக்குத் துளியும் விருப்பம் இல்லை," என்கிறார் தமன்னா.
*** இந்திப் படம் ஒன்றில் நடிப்பதற்காக தன் உடல் எடையை வெகுவாகக் குறைத்துள்ள இளம்நாயகி ஷாலினி பாண்டே, அந்தப் படம் முடியும் வரை மீண்டும் எடை அதிகரிக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளார்.
தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தமது உடல் எடையை குறைத்துள்ளார். இதனால் அடையாளம் காண முடியாதபடி மாறி உள்ளார்.
இந்நிலையில் தமிழில் உருவாகும் புதுப்படத்துக்காக அவர் மீண்டும் பழையபடி மாறவேண்டும் என்றும் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஷாலினியிடம் படத்தயாரிப்புத் தரப்பு கூறியதாகத் தகவல்.
ஆனால் ஷாலினியோ அதற்கு வாய்ப்பு இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டராம். தாம் ஏற்றுக்கொண்ட இந்திப் படத்துக்கான படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பிறகே தமது தோற்றத்தை மாற்றி அமைக்க முடியும் எனக் கூறியுள்ளாராம்.
, :
நிதி அகர்வால்

