கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் 'சிப்பாய்' படத்தின் பணிகள் மீண்டும் தொடங்க உள்ளன. 'சிலம்பாட்டம்' இயக்குநர் சண்முக சரவணன் இயக்கத்தில் உருவாகும் படம் இது.
முதல் படத்தில் சிம்புவை இயக்கிய அவர், அடுத்து கவுதமுடன் களமிறங்கி உள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நீண்டகால தயாரிப்பில் உள்ள இப்படம் இடையில் சில பிரச்சினைகளால் நின்றுபோனதாகத் தகவல் வெளியானது. கவுதம் கார்த்திக்கின் கால்ஷீட் கிடைக்காததும் தாமதத்துக்கு ஒரு காரணமாக கூறப்பட்டது.
80 விழுக்காடு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்தார் தயாரிப்பாளர் தணிகைவேல். இப்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளனராம்.
திட்டமிட்டபடி சில தினங்களில் படப்பிடிப்பு நிறைவடையும் பட்சத்தில் ஆண்டு இறுதிக்குள் இப்படம் திரைகாணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தணிகைவேல் ஏற்கெனவே சில படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். மேலும், 17 அனைத்துலக திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்ற 'ஒற்றை பனை மரம்' படத்தை தயாரித்தவர்.
இயக்குநர் சண்முக சரவணன் முன்பு பல வெற்றிப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
'சிப்பாய்' படத்தின் கதைக்களம் இளையர்களை நிச்சயம் கவரும் என்றும் கவுதம் கார்த்திக்கிற்கு திரையுலகில் திருப்புமுனைப் படமாக இது அமையும் என்றும் கூறுகிறார் சண்முக சரவணன்.
தற்போது இணையத்திலேயே நேரடியாக படங்களை வெளியிட இயலும் என்பதால் முடங்கிக் கிடக்கும் பல படங்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

