தாம் நடிக்கும் கதாபாத்திரங்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்வதாகச் சொல்கிறார் பிரியாமணி.
தம்மால் முடிந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் நடிப்பதாகவும் ஒரு திரைப்படத்தின் வெற்றி, தோல்வி என்பது தம் கையில் இல்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
தனுஷ், மஞ்சுவாரியர் நடித்திருந்த 'அசுரன்' படத்தை தெலுங்கில் 'நாரப்பா' என்ற தலைப்பில் மறு பதிப்பு செய்துள்ளனர். இதில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஜோடியாக நடித்துள்ளார் பிரியாமணி.
படம் நல்ல வசூல் கண்டுள்ள நிலையில், விமர்சகர்கள் இவரது நடிப்பைப் பாராட்டி உள்ளனர். இந்நிலையில், 'அசுரன்' படத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பு தம்மை வெகுவாகக் கவர்ந்தது எனப் பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பாராட்டி உள்ளார் பிரியாமணி.
"வெங்கடேஷ் முதன்முறையாக கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருப்பினும் அவரது நடிப்பு மிக அருமையாக இருந்தது. ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தை மறுபதிப்பு செய்வது சவாலான பணி.
"நம்முடைய நடிப்பு ரசிகர்களுக்குப் பிடிக்கவேண்டும் என்பது முக்கியமானது. 'நாரப்பா' படத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் நடித்தால், ரசிகர்களிடம் பெயர் வாங்கமுடியுமா எனும் சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து நீண்ட நேரம் யோசித்து, பிறகு நடிப்பது என முடிவெடுத்தேன். ஆனால், இந்த அளவுக்குப் பாராட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை," என்கிறார் பிரியாமணி.
தெலுங்கு மறுபதிப்பில் நடிப்பது குறித்து இயக்குநர் வெற்றிமாறனிடம் விவரம் தெரிவித்தாராம். அவர் மனதார வாழ்த்தியதுடன், 'உங்களால் கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடிக்கமுடியும்' என்றும் குறிப்பிட்டாராம்.
"அசல் பதிப்பில் மஞ்சு வாரியரின் நடிப்பு அற்புதமாக இருந்தது. அதுபோன்று நேர்த்தியாக நடிப்பது எளிதல்ல.கதாபாத்திரங்களை தேர்வு செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்வேன். அதேசமயம் பாத்திரங்களுடனான பந்தம், பட வேலைகள் முழுமையடைந்த பின்னர் முடிவுக்கு வந்துவிடும். 'நாரப்பா'விலும் இதே கோணத்தில் யோசித்துத்தான் நடிப்பது என முடிவு செய்தேன், நல்லவிதமாக நடித்தேன்," என்கிறார் பிரியாமணி.
பிரியாமணி

