சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வேங்கட்ராகவன் இயக்கத்தில் உருவாகிறது 'கடமையைச் செய்'. இதில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கிறார்.
நாம் அனைவரும் நமக்குரிய கடமைகளைச் சரிவரச் செய்தால் போதும். உலகம் சிக்கலின்றிச் சுழலம், நமக்குரிய பலன்கள் தன்னால் வந்து சேரும் என்பதுதான் இந்தப் படம் நமக்குச் சொல்லப்போகும் முக்கியமான கருத்து.
தனது குருநாதரான சுந்தர்.சி இயக்கத்தில் உருவான சில படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார் வேங்கட்ராகவன். பிறகு 'முத்தின கத்திரிக்கா' என்ற படத்தை இயக்கியுள்ளார். முதல் படத்தில் பெற்ற அனுபவங்களின் துணையோடு அடுத்த சுற்றை தொடங்கி உள்ளதாகச் சொல்கிறார்.
'கலகலப்பு 2', 'அரண்மனை 3' படங்களுக்கான பணியை முடித்துவிட்டு, புது வேகத்துடன் களமிறங்க திட்டம் போட்டிருந்த நிலையில், கொரோனா நெருக்கடி அனைத்தையும் கெடுத்துவிட்டதில் வேங்கட்ராகவனுக்கு பெரும் ஏமாற்றம்.
"எனினும் கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்கி, இப்போது முழுப்படத்தையும் முடித்துவிட்டோம். என் முதல் படத்தின் நாயகன் எனது குருநாதர் சுந்தர்.சி.
"பல வெற்றிப் படங்களைத் தந்த அவரைப் போலவே எனது இரண்டாவது படத்தின் நாயகனான எஸ்.ஜே.சூர்யா சாரும் வெற்றி இயக்குநர் என்பது ஆச்சரியம் தரும் பொருத்தம்," என்று உற்சாகத்துடன் குறிப்பிடுகிறார் வேங்கட்ராகவன்.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் பங்களிப்பு என்ன?
"அவர்தான் கதாநாயகன். அவர் தனது நடிப்பால் மட்டுமல்ல, தனக்குள் இருக்கும் இயக்குநரையும் வெளிப்படுத்தக்கூடியவர்.
"அவர் இந்தப் படத்தில் என்னென்ன வகையில் தனது பங்களிப்பை தந்துள்ளார் என்பதை இப்போதே சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்தப் படம் குடும்பத்துடன் திரையரங்குக்கு வந்து பார்க்கக் கூடிய படைப்பாகத்தான் இருக்கும்.
"அப்படிப்பட்ட கதையைத்தான் கையாண்டுள்ளோம். எந்தவொரு காட்சியும் சுவாரசியமாக இருக்குமே தவிர, தேவையற்றதாகவோ, வேண்டாத விஷயங்களைச் சொல் வதாகவோ இருக்காது," என்று உத்தரவாதம் அளிக்கிறார் வேங்கட்ராகவன்.
எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் மிக வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுபவர், அவரது நடிப்பு படத்துக்குப் பெரும் பலம் என்கிறார்.
"எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு குறித்து ரசிகர்களுக்கு சில எதிர்பார்ப்புகள் உள்ளன. அவர் திரையில் தோன்றும்போது ஏதாவது வித்தியாசமாக நடக்கும் என நம்புகிறார்கள்.
"அந்த நம்பிக்கை வீண்போகாது. அதேசமயம் அவரைப் பற்றி ரசிகர்கள் யூகித்து வைத்துள்ள அம்சங்கள் ஏதும் இடம்பெறாது. அதைவிட வித்தியாசமான உடல்மொழி, நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்," என்று எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறார் இயக்குநர் வேங்கட்ராகவன்.
இப்படத்தின் நாயகி யாஷிகா ஆனந்த், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருப்பது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு இந்தப் படத்தில் ஓரளவு கனமான கதாபாத்திரம் அமைந்துள்ளது.
"யாஷிகாவால் எத்தகைய கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும். அதை நிரூபிக்கும் வகையில் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
"எனது குருநாதர் சுந்தர்.சியின் பலம் என்ன என்பதை அருகில் இருந்து பார்த்துள்ளேன். எந்தவொரு வசனமும் யதார்த்தமாகவும் கதைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பார்.
"பிறரைக் கிண்டல் செய்வது போன்ற காட்சி என்றாலும்கூட, அதற்கான வசனங்கள் யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அதைத்தான் நானும் பின்பற்றி உள்ளேன்.
"என்னைப் பொறுத்தவரை கதாநாயகனுக்கும் நாயகிக்கும் இடையே உள்ள உடல்மொழி இரண்டாம் பட்சம்தான். நாம் சொல்லப்போகும் கதைக்கும் அதை திரையில் காணும் ரசிகர்களுக்கும் இடையேயான உடல்மொழிதான் மிக முக்கியம்," என்கிறார் இயக்குநர் வேங்கட்ராகவன்.

