கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்தாலும் மேலும் பல பிரச்சினைகள் தங்களை வட்டமிட்டுக் கொண்டிருப்பதாக தமிழ்த் திரையுலகத்தினர் சொல்கின்றனர்.
படப்பிடிப்புகளை நடத்த போதுமான அரங்குகளும் வீடுகளும் இல்லை என்பதுதான் அவற்றுள் முக்கியமானவை.
இதனால் பெரும்பாலானவர்கள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவுக்குப் படையெடுக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஹைதராபாத் நகரில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில்தான் முன்னணி தமிழ் நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கான படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
அங்கு படப்பிடிப்பு நடப்பது தெரிந்தால் கோடம்பாக்கத்து கலைஞர்கள் உற்சாகமாகிவிடுகிறார்கள். காரணம், அங்குள்ள வசதிகள் அப்படிப்பட்டவை என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
இப்போது ஹைதராபாத்தில்தான் ரஜினியின் 'அண்ணாத்த', அஜித்தின் 'வலிமை', 'தனுஷ் 43', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', விஷாலின் 'எனிமி' எனப் பல படங்களின் பணிகள் நடந்து வருகின்றன என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"ராமோஜிராவ் திரைப்பட நகரில் இல்லாத வசதி என்ற பேச்சுக்கே இடமில்லை.
"கொரோனா காலம் என்பதால் வெளியாட்கள் உள்ளே வராமலும் உள்ளே இருப்பவர்கள் வெளியே போகாமலும் இருப்பதற்கான ஏற்பாடுகளை எளிதில் செய்ய முடியும். மிகப் பாதுகாப்பான சூழலில் அங்கு வேலைகளைக் கவனிக்கலாம்.
"சாலையில் எடுக்கவேண்டிய காட்சிகளை சென்னையில் படமாக்குவது எளிதல்ல. அதற்காக பல்வேறு தரப்பினரிடம் அனுமதி பெற வேண்டி இருக்கும்.
"தவிர, சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதனால்தான் தமிழ் சினிமாக்காரர்கள் ஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கிறோம்," என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
சென்னையில் தற்போது இயங்கும் சில ஸ்டூடியோக்களையும் தொலைக்காட்சித் தொடர்களுக்காக முன்கூட்டியே பல மாதங்களுக்கு முன்பதிவு செய்து விடுகிறார்களாம். மேலும், முன்புபோல் குடும்பக் காட்சிகளைப் படமாக்க சென்னையில் வீடுகள் கிடைப்பதில்லை என்றும் திரையுலகத்தினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஏவிஎம், டிஆர் கார்டன், அம்பிகா கார்டன் போன்ற பல பெரிய ஸ்டூடியோக்கள் இப்போது முழுவீச்சில் இயங்குவதில்லை அல்லது மூடப்பட்டுவிட்டன என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஹைதராபாத்தில் ராமோஜி திரைப்பட நகரம், ராமநாயுடு ஸ்டூடியோஸ், சாரதி ஸ்டூடியோஸ், அன்னபூரணா ஸ்டூடியோஸ் ஆகியவை ஐம்பது ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் நிலையில், சென்னையில் ஏவிஎம், முருகாலயா, பரணி, சியாமளா போன்ற ஸ்டூடியோக்கள் முடப்பட்டுவிட்டன.
"ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களும் கூட ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுவதை விரும்புகிறார்கள். காரணம், அங்குள்ள வசதிகள், பாதுகாப்பு. தவிர, படப்பிடிப்புக்கான செலவுகளும் குறைவு.
"சென்னையிலோ நிலைமை இதற்கு நேர்மாறாக உள்ளது. செலவு அதிகம் என்பதுடன் நேரமும் விரயமாகிறது. சிவகார்த்திகேயன் போன்ற இளம் நடிகர்களும் கூட இப்போது ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று மொழிகளில் உருவாக்கப்படும் படங்களில் நடிக்கிறார்கள். எனவே கால்ஷீட் விஷயத்தில் சரியாக இருக்கவேண்டும். சிறு தாமதங்கள் ஏற்பட்டாலும் சிக்கலாகிவிடும்.
"எனவே எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள் எனத் தயாரிப்புத் தரப்பிடம் கூறிவிடுகின்றனர். அதன்பிறகு தயாரிப்பு நிர்வாகி தேர்வு செய்யும் முதல் இடம் அண்டை மாநிலங்களில் உள்ள ஸ்டூடியோவாகத்தான் இருக்கும். இன்றைய தேதியில் ஒரு திரைப்படத்தை எடுப்பதைக் காட்டிலும் அதை வெளியிடுவதுதான் சவாலாக இருக்கிறது. எனவே திட்டமிட்டபடி குறித்த தேதியில் படத்தை எடுத்து முடிக்காவிட்டால் தயாரிப்பாளர்கள் பாடு திண்டாட்டம்தான்.
"அதனால் படத்துக்குப் பூசை போட்ட கையோடு, படப்பிடிப்பைத் தொடங்க ஹைதராபாத் உட்பட அண்டை மாநிலங்களில் நல்ல முறையில் இயங்கி வரும் ஸ்டூடியோக்களை முன்பதிவு செய்கிறார்கள். கொரோனா நெருக்கடி காலத்தில் பாடம் கற்றுக்கொண்ட முன்னணி நாயகர்களும் நாயகிகளும் இந்த ஏற்பாட்டை வரவேற்கிறார்கள்.
"சென்னையில் படப்பிடிப்புக்கான வசதிகள் அதிகரித்து, நடைமுறைச் சிக்கல்கள் குறைந்தால் மட்டுமே ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள தமிழ் சினிமா கலைஞர்கள் மீண்டும் கோடம்பாக்கம் பக்கம் பார்வையைத் திருப்புவார்கள்," என்கின்றனர் விவரப் புள்ளிகள்.
, :
சிவ கார்த்திகேயன்

