திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றன. இதையடுத்து திரையுலகில் இருந்து பல்வேறு புதுப் படங்களுக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன.
நடிகை நித்யா மேனன் தெலுங்குப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் 'பவர் ஸ்டார்' என்று குறிப்பிடப்படும் பவன் கல்யாணுடன் அவர் இணைந்து நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்தாண்டு மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படத்தை பல்வேறு மொழிகளில் மறுபதிப்பு செய்ய பலத்த போட்டி நிலவுகிறது.
மலையாளத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும் கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தை தற்போது தெலுங்கில் மறுபதிப்பு செய்கின்றனர். இதில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணாவும் நடிக்கின்றனர்.
இப்படத்தில் இடம்பெற்ற கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. கதைப்படி, அய்யப்பனின் மனைவி கண்ணம்மா. இந்த வேடத்தில்தான் நித்யா ஒப்பந்தமாகி உள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் முபாரக் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஜி.வி.பிரகாஷும் காயத்ரியும் இணைந்து நடிக்கின்றனர்.
இதற்கான படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இது முழுநீள திகில், அடிதடிப் படமாக உருவாகிறது. இந்தக் கதைக்கு ஜி.வி.யும் காயத்ரியும்தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று தாம் கருதியதாகவும் அந்த கணிப்பு பொய்யாகவில்லை என்றும் சீனு ராமசாமி கூறியுள்ளார்.
"முக்கிய காட்சிகளை கிராமத்துப் பின்னணியில் படமாக்கி உள்ளோம். ஆண்டிப்பட்டி, தேனி, கொடைக்கானலில் படப்பிடிப்பு நடக்கிறது. ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
"படப்பிடிப்பு துவங்கும் முன்பே, படத்திற்கான வியாபாரம் தொடங்கிவிட்டது. இரண்டு 'ஓடிடி' நிறுவனங்கள் பேசி வருகின்றன," என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியை அடுத்து, பா.ரஞ்சித் முழுநீள காதல் கதையை இயக்க உள்ளார். 'நட்சத்திரம் நகர்கிறது' என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு 'சார்பட்டா பரம்பரை' நாயகி துஷாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கதாநாயகனாக அசோக் செல்வன் அல்லது நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஆகிய இருவரில் ஒருவர் நடிக்கக்கூடும்.
'சார்பட்டா' படத்தில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் துஷாரா. தனது நடிப்பை அங்கீகரிக்கும் வகையில் ரஞ்சித் அடுத்த வாய்ப்பையும் அளித்திருப்பது அவரை உற்சாகப்பட வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம். இதில், நாயகனாக ஆதியும் நாயகியாக அக்ஷரா கௌடாவும் ஒப்பந்தமாகி உள்ளனர்.
தெலுங்கு முன்னணி நடிகர் ராம் பொத்தினேனி, கிருத்தி ஷெட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதுவரை அதிக ஒப்பனைக்கு இடம்கொடுக்காமல் யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதே தமது விருப்பம் என்று சொல்லி வந்த அக்ஷரா, இந்தப் படத்தில் நகரத்துப் பெண்ணாக நடிக்க உள்ளார். இந்தப் புதிய முயற்சியில் ஈடுபடுவது தமக்கு உற்சாகம் அளிப்பதாக அவர் கூறுகிறார்.
"முதல் முறையாக இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் மதுரை தமிழ் பேசும் பெண்ணாகவும் தெலுங்குப் பதிப்பில் கடப்பா தெலுங்கு பேசும் பெண்ணாகவும் நடிக்கிறேன். உண்மையில் இது ஒரு சவாலான பணி. ஆனால், மிகுந்த ஆர்வத்துடன் நடிப்பேன்," என்கிறார் அக்ஷரா கௌடா. இவர் ஏற்கெனவே தமிழில் நடித்து முடித்துள்ள 'சூர்ப்பனகை', 'இடியட்' ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன.

