அண்மையில் தமது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார் தனுஷ்.
கொரோனா நெருக்கடி வேளையிலும் அவரது புதுப்படங்கள் வெளியீடு கண்டுள்ளன. ஒவ்வொரு படத்தையும் தகுந்த திட்டமிடலோடு ஏற்று நடிப்பதும் கால்ஷீட், சம்பளம் உட்பட அனைத்து விஷயங்களிலும் முறையாகச் செயல்படுவதும்தான் அவரது வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் தனுஷுக்கு நெருக்கமானவர்கள்.
அவரைப் பற்றிய கூடுதல் விவரங்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு அடுத்து வரும் வரிகள் சுவாரசியமானதாக இருக்கும்.
தனுஷ் முழுமையான சிவபக்தராம். எப்போதும் லிங்க வழிபாடுதான். எப்போதெல்லாம் எந்தக் கடிதம் எழுதினாலும் 'ஓம் நமச்சிவாயா' எனக் குறிப்பிட்டுதான் முடிக்கிறார்.
எதிர்வரும் புத்தாண்டில் சென்னையில் புது வீட்டில் குடியேற உள்ளார் தனுஷ். அதுவும் சென்னையில் பணக்காரர்கள் அதிகம் குடியிருக்கும் போயஸ் தோட்டப் பகுதியில் தான் புது வீட்டைக் கட்டி உள்ளார்.
மாமனார் ரஜினியும் இதே பகுதியில் குடியிருப்பது ஒருபக்கம் இருக்க, இங்கு ஒரு சதுர அடி நிலத்தின் விலை வாய்பிளக்க வைக்கும்.
அப்படிப்பட்ட இடத்தில், தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற பல கோடிகளைக் கொட்டி வீடு கட்டியுள்ளார் தனுஷ். அதிலும், முழுக்க முழுக்கத் தன் உழைப்பால், தன் சம்பாத்தியத்தைக் கொண்டு இடம் வாங்கி கட்டப்படும் வீடு இது.
தனுஷ் இப்போது சுத்த சைவமாக மாறிவிட்டார். அசைவ உணவுகளை தொடுவதே இல்லை. உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம், ரசம் தான் பிடித்தமான உணவு வகைகள்.
இளையராஜா இசைக்கு தாம் அடிமை என்பார் தனுஷ். இளையராஜாவின் கச்சேரி என்றால் இவரை முதல் வரிசையில் பார்க்க முடியும்.
நகைச்சுவை நடிகர்களில் கவுண்டமணிதான் தனுஷின் மனம் கவர்ந்தவர். அவரது உடல்மொழியை யாரும் காப்பியடிக்கவே முடியாது என்பாராம்.
கவுண்டமணியுடன் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்க முடியவில்லை என்ற ஏக்கம் தனுஷுக்கு அதிகமாகவே உள்ளது. அதே போல் 'ஆச்சி' மனோரமாவுடன் இணைந்து நடிக்க முடியாமல் போனது தமது வாழ்நாள் சோகங்களில் ஒன்று என்றும் நெருக்கமானவர்களிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்படுவாராம்.
தனுஷ் ஓர் 'அம்மா பிள்ளை'. தாயார் சொல்லுக்கு மறுப்பேச்சு என்பதே அவரிடம் கிடையாது.
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, தினமும் இரண்டு நிமிடங்களாவது தன் தாயாருடன் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நேரமும் வாய்ப்பும் அமைந்தால் தேனிக்கு அருகில் இருக்கும் கருப்பசாமி குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது அவரது வழக்கம். குறைந்தபட்சம் இரண்டு நாள்களாவது அங்கே தங்கிஇருந்து சாமி கும்பிட்டு, சம்பிரதாயங்களை எல்லாம் முடித்துவிட்டுத்தான் சென்னை திரும்புவார்.
"உலகளவிலான நகரங்களில் தனுஷுக்குப் பிடித்தமான ஊர் லண்டன். அங்குள்ள அனைத்துப் பகுதிகளும் அவருக்கு அத்துப்படி. எத்தனை முறை அங்கு சென்றுவந்தாலும் சலிப்பே ஏற்படுவதில்லை என்றும் வாழ்நாள் முழுவதும் இது நீடிக்கும் என்றும் அவர் அடிக்கடி சொல்வதுண்டு என்கிறது நட்பு வட்டாரம்.
மழையை நேசிக்கும் ரசிக்கும் இயற்கை பிரியர் தனுஷுக்கு, மழை வேளையில் சூடாக வடை சாப்பிடுவது மிகவும் பிடித்தமான விஷயம். அதேபோல் நாவல்கள் படிப்பது என்றாலும் ரொம்பப் பிடிக்கும். ஆனந்த விகடனில் வெளியான சு.வெங்கடேசனின் 'வேள்பாரி' தான் அவர் அண்மையில் படித்தது.
அண்மைக்காலமாக இந்தி, ஹாலிவுட் படங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

